அழகியசிங்கர்/ சாவு நிச்சயமென

 

19.09.2025 அன்று விருட்சம் இணைய வழி கவியரங்கில் வாசித்த கவிதை 3

    பெயர்கள் மட்டும் கற்பனையே
    சொல்வதெல்லாம் உண்மையே
            கே கே நகரில்
            ஒதுக்குப்புற        
            அனாதை இல்லம்
            ஈஸ்வரியைப் பார்த்தான்
            நிருபன்
    கருத்த உடல்
    களைத்த முகம்
    கபடமறியா பெண்ணிவள்
    பயமும் துக்கமும் முகத்திலறைய
    வெற்றிடத்தை வெறித்துப் பார்த்தாள்
    நோயைத் தந்து விடுவாளென்று   
    ஒதுக்கி வைத்தனர் தனி அறையில்
            நிருபன் வருகிற
            செய்தியை அறிந்தும்
            எழுந்து வர விரும்பவில்லை
    யாரும் சந்திக்க விரும்பாத
    தனி அறையொன்றில்
    சாவு நிச்சயமென
    நம்பிக்கையுடன்
    நாட்களைத் தள்ளிக்கொண்டு
        வேண்டாத ஒன்றை
        பார்ப்பதுபோல்
        யார் பார்வையிலும் அடங்காமல்
        போய்விட்ட அவளை
        நிருபன் கூப்பிட்டான்:
        வெறுப்பாய்த் திரும்பிப் பார்த்தாள்
    முகத்தில் உற்சாகம் சிறிதுமில்லை
    பார்வையில் ஒளியோ
    அறவே இல்லை
    'நான் வந்திருக்கிறேன்
    பத்திரிகையிலிருந்து
    வேணும் செய்தி உங்களைப்பற்றி'
        'அலுத்துப் போயிற்றுச் சொல்லிசொல்லி
        உங்கள் பாவங்களின் சார்பில்
        என் வாழ்க்கை. முடிந்தது எல்லாம்'
        என்றாள் மடக்கென்று
        கழுத்தைத் திருப்பி

    ஒன்றுமறியா பச்சிளங் குழந்தை
    நிருபனைப் பார்த்து கை அசைத்தது
(எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக..)

அழகியசிங்கர் கவிதை – விருட்சம் நாளிதழ்

One Comment on “அழகியசிங்கர்/ சாவு நிச்சயமென”

Comments are closed.