
19-9-25 அழகிய சிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 7
குடிசை வீடுகள் ஓட்டு வீடுகளானபோது
படர இடமின்றிச் சுரைகொடிகள்
பரிதவித்துப் போயின.
ஓட்டு வீடுகள் மாடி வீடுகளானபோது
பதுங்க இடமின்றிப் பாம்புகளும் தேள்களும் அலைக்கழிந்து போயின.
எல்லாமே தார்ச்சாலைகள் கான்கிரீட் என்றானதும்
மழைநீர் உள்ளே செல்வதை மறந்துவிட்டது.
மாடி வீடுகூட மறைந்துபோய்
அடுக்குமாடிக் குடியிருப்பென ஆனபோது தான்
அக்கம்பக்க உறவுகள் அந்நியமாகிப் போயின.
