க.சோமசுந்தரி./அனுதினமும்

கவிதை வரிசை எண் 3

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை

கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர்

மழைக்கால வர்ணமாய்
அழகாய் குடைப் பிடிக்கிறது
என் முற்றத்து வானவில்!!

தலைக் கவிழ்ந்தே
வெட்கத்தில் பூத்திருக்கிறது
என் தோட்டத்துச் செம்பருத்தி!!

அழகாய் நகரும் பொழுதுகளிளெல்லாம்
தினம் தினம் இசைக்கிறது
மனமெங்கும் புல்லாங்குழல் ஓசை!!

காட்சிப்படுத்த முடியாத ஓவியமாய்
அனுதினமும் உயிர்ப்பாய் உலவுகிறது
உனக்கான என் நிமிடங்கள்!!

விட்டு விட முடியாமலேயே…
தொடரும் நிழலென
உள்ளம் எங்கும் பிரதிபலிக்கிறது
உன் மீதான என் நினைவுகள்!!

கடல் தள்ளிய கடைசி
அலையின் நுரையாய்
நீர்க்குமிழியென காத்திருக்கிறது!

உன்னிடம் சொல்லாத
ஒரு சொல்லின் நீட்சியாய்… இன்றும்…மௌனமாய்
நீந்தி நிற்கும்
அந்த ஒற்றை சொல்!

One Comment on “க.சோமசுந்தரி./அனுதினமும்”

Comments are closed.