
சலனம்.
தோளருகே… தலைக்கு மேலே…
ட்யூப் லைட்டிலிருந்து ஒரு சாண் தள்ளி, உட்காரலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் சில நொடிகளுக்கு இறக்கைகளைப் படபடத்தவாறு தயங்கிய அந்தப் பட்டாம்பூச்சி, பிரார்த்தித்துக்கொண்டதுபோல பிரதட்சிணமாகவும் அப்பிரதட்சிணமாகவும் நான்கைந்து முறைகள் விளக்கைச் சுற்றிவந்துவிட்டு, களைத்துப்போய் சுவற்றில் தொற்றிக்கொண்டு இளைப்பாற முற்பட்டது.
மூக்கிலிருந்து இறங்கிவிட்ட கண்ணாடியை மேலே தள்ளியவன், ஒருவித சுவாரஸ்யத்துடன் பட்டாம்பூச்சியைக் கவனித்தான்.
அப்படியொன்றும் அழகானது என்று சொல்ல முடியாது… ஓரோர் பட்டாம் பூச்சிபோல ஆரஞ்சும் மஞ்சளுமாய் மின்னவில்லை. சாதாரண பழுப்பு நிறம். இறக்கைகளின் ஓரங்களில் கரைகட்டின மாதிரியும், நடுவில் பொட்டுப்பொட்டாயும் கறுப்பு வண்ணம். பழுப்பில் கறுப்பு எப்படி எடுபடும்?
அவனுக்கு மீனாம்பா பாட்டியின் ஞாபகம் வந்தது. ரொம்ப சின்ன வயதில், வருடாவருடம் கோடை விடுமுறைக்கு ஆதிச்சபுரத்திலிருந்த மீனாம்பா பாட்டி வீட்டுக்குத்தான் போவது வழக்கம். பாட்டி வீட்டை ஒட்டிக் கால்வாய் சலசலத்துக் கொண்டு ஓடும். அமானுஷ்ய அமைதியை பங்கப்படுத்தும் முயற்சியில் சில்வண்டுகள் எப்போதும் சத்தமிடும். நாணற்புதர்களுக்கு மேலே வண்ண வண்ணமாய் பட்டாம்பூச்சிகள் பறந்து ஆளை மயக்கும். அப்படி ஆளைக் கிறங்கடித்த வண்ணத்துப்பூச்சி ஒன்றை, அது ஏமாந்திருந்த சந்தர்ப்பத்தில் இரண்டு இறக்கைகளையும் ஒருசேரப் பிடித்து, வீட்டுக்குத் தூக்கி வந்து, “இதுவும் தட்டான்பூச்சிபோலக் கல்லைத் தூக்குமாடா?” என்று ஒருநாள் சின்னக் கோண்டுவிடம் கேட்டதைக் காதில் வாங்கியவாறு மீனாம்பா பாட்டி வந்துவிட்டார்.
“என்னடா செஞ்சிண்டிருக்கே?”
“ஒண்ணுமில்லே, பாட்டீ… தும்பி மாதிரி இதுவும்…”
முடிப்பதற்கு முன் பாட்டி அதட்டினார். “அடே கடங்காரா… அதும்பாட்டுக்கு தேமேன்னு போற வண்ணாத்திப்பூச்சியப் பிடிச்சுண்டு வந்து ஏண்டா இம்சை பண்றே? சட்டுனு மறுபடி பறக்க விட்டுடு… இல்லேன்னா உன்னை அது சபிச்சுடும்!”
அவன் சிரித்தான். “ஐயே… இது வண்ணாத்திப்பூச்சி இல்லே, பாட்டீ… பட்டாம்பூச்சி! இங்கிலீஷ்ல ‘பட்டர்ஃப்ளை’னு சொல்…”
நான்கே எட்டில் கிட்டத்தில் வந்த பாட்டி, மறுபடியும் அவன் முடிக்கும் முன்னர் குறுக்கிட்டு முறைத்தார். “வண்ணாத்திப்பூச்சி பாவம் பொல்லாதது, விட்டுடுன்னு சொல்றேன்… கேக்காம மேம்மேல பேசறியா, படவா…”
பாட்டிக்குக் கோபம் அதிகம் வந்தால் வலிக்கக் குட்டுவார்… தெரியும். அதற்கு இடம்தராமல் பட்டாம்பூச்சியைப் பறக்கவிட்ட அன்றிரவுதான், முற்றத்தில் வெள்ளையாய் நிலா வெளிச்சம் விழ, கையில் வத்தல்குழம்பு சாதத்தை நல்லெண்ணெய் விட்டு மணக்கமணக்கப் பிசைந்து போட்டுக்கொண்டே, முதல் முறையாய் அந்தக் கதையைச் சொன்னார்.
“ஒரு ஊர்ல ஒரு வண்ணான். ரொம்ப நல்லவன். அவனுக்கு ஒரு பொண்டாட்டி. அவளும் மகா உத்தமி. தினமும் ரெண்டு பேரும் விடிகார்த்தால எழுந்து ஒண்ணா துறைக்குப் போயி ஒண்ணா துணி வெளுத்து, ஒண்ணா வீட்டுக்கு வந்து சாப்பிடுவாளாம். அவ்வளவு ஒத்துமை! ஒரு சமயம் விடாம மழை கொட்டி சலவைக்கு எதிர்பாராம நிறைய துணி சேர்ந்துட்ட ஒரு நாள்ல, ‘வானம் கொஞ்சம் வெளுத்திருக்கு… நா முன்னால ரெண்டு மூட்டை வெள்ளைத் துணிங்களை எடுத்துண்டுபோயி வெள்ளாவி வெக்கறேன். நீ சாப்பாட்டோட பாக்கியிருக்கற கலர்த் துணிங்களை எடுத்துண்டு வா. வேலை முடிஞ்சதும் அங்கேயே சாப்டுட்டு நிதானமா வீடு திரும்பலாம்’னு சொல்லிட்டு புருஷன்காரன் கிளம்பிப் போயிட்டான். இவளும் அவனுக்குப் புடிச்ச சமையலா செஞ்சு எடுத்துண்டு, ஒரு மூட்டை கலர்த் துணிகளையும் தூக்கிண்டு ஆத்துக்குக் கிளம்பினா. ஆனா, அதுக்குள்ள மழை மறுபடியும் புடிச்சுண்டுட்டதுல, ஆத்துல தண்ணி கிடுகிடுன்னு ஏறிப்போயி, வெள்ளம் வண்ணானை அடிச்சுண்டுபோயிடறது! பாவம் வண்ணாத்தி… சாப்பாட்டுக் கூடையும் துணி மூட்டையுமா ஆம்படையானைத் தேடித்தேடி அலைஞ்சுட்டு, கடைசில, முதுகுல இருந்த அத்தனை துணிகளும் கலர்க்கலரான இறக்கைகளா மாற, அவ ஒரு அழகான வண்ணாத்திப்பூச்சியாவே ஆயிடறா! இன்னிக்கும் வண்ணாத்திப்பூச்சி ஒரு எடத்துல தங்காம மொலுமொலுன்னு பறந்துண்டே தன் புருஷனைத்தான் தேடறது… யாராவது அப்படித் தேடறதுக்கு இடைஞ்சல் பண்ணினா, ‘எங்களை மாதிரி நீயும் உன் பொண்டாட்டியும் பிரிஞ்சு அவஸ்தைப்படணும்’னு அது சபிச்சுடுமாம்! இப்பப் புரியறதா, ஏன் அத விட்டுடுன்னு சொன்னேன்னு?”
புரிந்தது.
கூடவே, ஈர மண்ணில் விழுந்த விதை மாதிரி அதற்குப் பிறகு பட்டாம்பூச்சியை எப்போது பார்த்தாலும், அதன்பால் ஒரு இரக்க உணர்வு முளைவிடுவதும் புரிந்தது.
பட்டாம்பூச்சி ட்யூப் லைட்டை விட்டுப் பறந்து ஜன்னலிடம் சென்று, வெளியே போவது மாதிரி பாவ்லா காட்டிவிட்டு, மீண்டும் விளக்கையே சுற்றி வந்தது.
மக்குப் பூச்சியே… உன் புருஷன் இந்த விளக்கடியிலா ஒளிந்திருக்கிறான்? வெளியே போய்த் தேடேன்!
அவன் புத்தகத்தைக் கையிலெடுத்து, விட்ட இடத்திலிருந்து படிக்க முற்பட்டான். பத்து நாட்களில் பாங்க் பரிட்சை வருகிறது. பொறுப்பாய்ப் படித்துப் பாஸ் செய்தால், உத்தியோக உயர்வு, கூடுதல் சம்பளம், அம்மாவை அழைத்து வந்து குடித்தனம் அமைப்பது – போன்ற உபரி வசதிகளுக்கு இடமுண்டு. இல்லாவிட்டால், இந்த நாற்றம்பிடித்த லாட்ஜ் அறை வாசமும், வேகாத ‘மெஸ்’ சோறும்தான் தொடரும்.
கட்டுப்பாட்டை மீறிக்கொண்டு புத்தி, பரபரத்துத் திரிந்த பட்டாம்பூச்சியிடமே ஓட… விளக்கை அணைத்துவைத்தால் வெளியே சென்றுவிடும் என்கிற எண்ணத்தில் விளக்கை அணைத்தான். இருட்டில் உட்கார்ந்திருந்த ஓரிரு நிமிடங்களிலும் தலைக்கு மேல் பூச்சி பறக்கும் சலனத்தை உணர முடிய, அவனுக்கு திடுமென அப்பா இருந்த நாட்களில் பழைய மாம்பலம் வீட்டில் குடியிருந்தபோது நடந்த சம்பவம் ஒன்றும் நினைவுக்கு வந்தது. அப்போது அவன் பள்ளியில் பத்தாவது படித்துக்கொண்டிருந்தான்.
துருப்பிடித்த டேபிள் ஃபேன் ஒன்றை வைத்துக்கொண்டு ஏழு பேர் காற்று வாங்கி நிம்மதியாய் உறங்கமுடியவில்லை என்பதால், தீபாவளி போனஸ் பணத்தில் சீலிங் ஃபேன் வாங்கிக் கூடத்தில் அப்பா மாட்டிய வருடம்.
ஒரு மாதம் சென்றிருக்கும்… இரண்டு நாட்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு உறவுக்காரர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றுவந்து பார்த்தால், கூடத்துத் தரை யெல்லாம் வைக்கோல், தேங்காய்நார்க் குப்பை, மின்விசிறியின் மேல்கிண்ணத் தில் கூடுகட்டிவிட்ட குஷியில் ஜாலியாய்க் குரல் கொடுத்துக்கொண்டு இங்கு மங்கும் பறக்கும் சிட்டுக்குருவிகள்!
“குருவிக்கூட்டைக் கலைச்சா, நம்ப குடும்பம் சிதறிடும்! அதும்பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டுமே! கூட ஒரு தடவை பெருக்கிட்டாப் போச்சு!” அம்மாவின் சிபாரிசில் குருவிகள் செளக்கியமாய் குடும்ப வாழ்க்கையைத் தொடர, விரைவிலேயே முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் ஓயாமல் கத்துவது கேட்க ஆரம்பித்தது.
ஒருநாள் ராத்திரி மணி ஒன்பதரை, பத்து இருக்கும்… விளக்கை அணைத்துப் படுத்துக் கொஞ்சநேரம்கூட ஆகியிருக்காது… ‘டப்’பென்று ஏதோ அடிபடும் ஓசை… பின்னோடு ‘சொத்’தென்று தரையில் எதுவோ விழும் சத்தம்…
மின்விசிறியில் அடிபட்டு தாய்க்குருவி செத்துப்போனதும், அடுத்துவந்த நாட்களில் குஞ்சுகள் அம்மாவுக்காகப் பரிதவித்ததும் நினைவுக்கு வர, அவன் சங்கடப்பட்டான்.
அந்தக் குருவி போல இந்தப் பட்டாம்பூச்சியும், சுழலும் விசிறியின் இறக்கையில் சிக்கிக்கொள்ளலாம் என்கிற எண்ணம் இருப்புக்கொள்ளாமையை அதிகமாக்க, அவசரமாய் எழுந்து சுவரில் தடவி ஸ்விட்சைக் கண்டுபிடித்து, ஃபேனை நிறுத்தினான்.
மறுபடி இருட்டைத் துழாவிக்கொண்டே கட்டிலில் உட்கார்ந்தான்.
ஓரிரு நிமிடங்கள் செல்வதற்குள் கழுத்திலும் கக்கத்திலும் வியர்வை கசகசக்க ஆரம்பித்ததும், மேற்கொண்டு பொறுக்க முடியாதவனாய் எழுந்து விளக்கைப் போட்டான்.
மொட்டுப்போல கதவுக்கு மேலே சமர்த்தாய் உட்கார்ந்திருந்தது, வெளிச்சம் பரவியதும் மீண்டும் பறக்கத் துவங்க, அவன் ஓரத்தில் வைத்திருந்த குடையை எடுத்து சுவரில் தட்டி அதை விரட்டப் பார்த்தான். பட்டாம்பூச்சி அறைக்குள்ளேயே சுழன்று வந்ததே தவிர, வெளியே போகப் பிடிவாதமாய் மறுத்தது.
சில நொடிகளுக்கு என்ன செய்வது என்று புரியாத தினுசில் மூச்சிரைக்க நின்றான். பட்டாம்பூச்சியை மறந்துவிட்டுப் புத்தகத்தைப் படிக்கலாமா என்றும் நினைத்தான். முடியாது என்று தோன்ற, விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான்.
புழுக்கம் அதிகமாய் இருந்ததில், உறக்கம் வர மறுத்தது. பட்டாம்பூச்சி எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு மின்விசிறியைச் சுழலவிட்ட சில நொடிகளுக்கெல்லாம், அது மடத்தனமாய்க் குறுக்கே பறந்து அடிபடுகிற மாதிரியான கற்பனை எழ, ‘சனியன், சனியன்’ என்று வாய்விட்டு வைதுகொண்டே எழுந்தான்.
இரவு முழுவதும் இப்படி அல்லாடிக்கொண்டிருந்துவிட்டுக் காலையில் அவன் எழுந்தபோது, கண்கள் லேசாகச் சிவந்திருந்தன. முகத்தில் நீர் சுரந்திருந்தது.
கழிவறைக்குச் சென்று திரும்பியபோது எதிர்ப்பட்ட மூன்றாவது அறை பாஸ்கர், “என்ன, நைட் ஷோவா?” என்ற கண்களைச் சிமிட்டி வினவியது எரிச்சலை எழுப்பியது.
உடை உடுத்தித் தயாரான நாழிகையில் அந்தப் பட்டாம்பூச்சி ஜன்னல் வென்டிலேட்டர் மேல் உட்கார்ந்திருப்பதைப் பார்க்க முடிய, மாலை அலுவலகத்திலிருந்து திரும்புவதற்குள் அது நிச்சயம் வெளியே பறந்துவிடும் என்று உறுதியாய்த் தோன்றியது. எதற்கும் இருக்கட்டும் என்று ஜன்னலை அகலத் திறந்து, கொக்கியைப் போட்டுவிட்டுக் கிளம்பினான்.
நாள் முழுவதும் துளி ஓய்வு இல்லாமல் உழைத்துவிட்டு மாலையில் லாட்ஜுக்கு வந்து, பூட்டியிருந்த அறைக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்து விளக்கைப் போட்ட நொடியில், அதுநாழிகை மறந்திருந்த பட்டாம்பூச்சியின் ஞாபகம் தலைதூக்கியது.
சட்டையைக்கூடக் கழற்றாமல் கண்களைச் சுழற்றிப் பார்த்தவரையில் அது தென்படாமல்போக, சன்னமாய் விசிலடித்துக்கொண்டே மின்விசிறியை வேகமாக ஓடவிட்டான். உடைகளைக் கழற்றி, லுங்கி அணிந்து, குளியலறைக்குச் சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தான்.
ஈரத்துண்டை நாற்காலியின் முதுகில் போட்டுவிட்டு, கண்ணாடிக்கெதிராக நின்று தலை சீவியபோது, முதலில் பின்னால் சலனத்தை உணரமுடிந்தது. பிறகு கண்ணாடியில் பிரதிபலித்த பிம்பத்தையும் பார்க்கமுடிந்தது.
திரும்பினான். அதுவேதான்… அந்தப் பழுப்பு பட்டாம்பூச்சியேதான்.
அன்றிரவும் முந்தின இரவுபோல அல்லாட்டத்தில் முடியுமோ என்கிற பதட்டம் எழ, கையிலிருந்த சீப்பை ஆத்திரத்துடன் பட்டாம்பூச்சியை நோக்கி வீசியெறிந்தான்.
யாரோ மணியடித்துக் கூப்பிட்ட மாதிரி வந்து கழுத்தை அறுக்கிறதே சனியன்!
லாட்ஜ் பையனைக் கூப்பிட்டு அதைத் துரத்தச் சொல்லலாமென்று எண்ணினான்.
பத்து நாட்களுக்கு முன் கீழ்த்தளத்தில் இருக்கும் செந்தில் அறையில் கருந்தேள் ஒன்று எப்படியோ புகுந்துவிட்டதும், அதை அடிக்கக் கூப்பிட்டதற்காக போவோர் வருவோரிடமெல்லாம், ‘ஒரு ஆம்பிளை, தேளைக் கண்டு பயப்பட்டா எப்படி!’ என்று லாட்ஜ் பையன் சொல்லி டபாய்த்ததும் நினைவுக்கு வர, பட்டாம் பூச்சியைத் துரத்த அழைத்தால், நாளைக்குப் பேரை சந்திசிரிக்கப் பண்ணிவிடுவான் என்ற பயம் தோன்ற, நினைப்பை மாற்றிக்கொண்டான்.
எரிச்சல் அடங்காமலேயே விளக்கை அணைத்து, கதவைப் பூட்டிக்கொண்டு மெஸ்ஸுக்கு சாப்பிடப் போனான்.
திரும்பி வந்தபோது, பிரச்சினை இன்னும் கொஞ்சம் சிக்கலாகியிருந்தது.
எங்கிருந்தோ அறைக்குள் வந்துவிட்ட சாம்பல்நிறப் பல்லி ஒன்று, பட்டாம் பூச்சிக்குக் குறிவைத்து அதைத் துரத்திக்கொண்டே நகர, பின்தொடரும் ஆபத்தை உணராமல் பட்டாம்பூச்சி தன் இஷ்டத்துக்கு மடத்தனமாய் சஞ்சரிக்க… அதை வேடிக்கை பார்த்தவாறு கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்க முடியாமல், பல்லி பூச்சியை நெருங்கவிடாமல் விரட்ட முற்பட்டான்.
சுவரில் பலமாய்த் தட்டி பல்லியை பயமுறுத்தினாலும், அது சில நிமிடங்களுக்குக் கட்டிலுக்கு அடியில், கதவிலிருந்த விரிசலில் – என்று இண்டு இடுக்குப் பார்த்து ஒளிந்து கொண்டிருந்துவிட்டு, மறுபடி ஓசைப்படாமல் வெளிப்பட்டுத் தன் இரையைத் தொடருவதிலேயே குறியாய் இருக்க, அவன் அதற்கு மிஞ்சின எச்சரிக்கையுடனும் வேகத்துடனும் செயல்படவேண்டி வந்தது.
இருக்கிற கஷ்டம் போதாதுபோல, சில சந்தர்ப்பங்களில் பல்லி எட்டிப்பிடிக்கிற தொலைவில் வலிய வந்து, அந்த முட்டாள் பட்டாம்பூச்சி உட்காருவதை விரட்டிவிடும் வேலையோடு, மின்விசிறியை நிறுத்தி, புழுக்கம் அதிகமானால் ஓடவிட்டு, மறுபடி நிறுத்திய அவஸ்தை வேறு சேர்ந்துகொண்டது.
இதனடுவில், பதட்டத்தில் அவன் எழுப்பிய ஓசைகளைக் கேட்டுவிட்டு, மூடியிருந்த கதவை அடுத்த அறை சுந்தரலிங்கம் தட்டி, “என்ன சத்தம், தம்பி? நிம்மதியா தூங்கவிடாம என்னத்த உருட்டிக்கிட்டு இருக்கீங்க? நடுராத்திரியில?” என்று அதட்டலாக விசாரித்ததையும் சமாளிக்கவேண்டிவந்தது.
இரவு கழிந்து, பொழுது விடிந்தபோது, சொதசொதத்து ஏகத்துக்கு சிவந்த கண்களும், அவற்றைச் சுற்றி கருவளையங்களுமாய் இருந்தவன், அதே கோலத்தில் ஆபீஸுக்குப் போனதும், தலையோடு கால் ஏறிட்ட அதிகாரி சிடுசிடுப்பை மறைக்காமல் கேட்டுவிட்டார்.
“வாட்ஸ் ராங்? ரொம்ப நல்ல பையன்னு நினைச்சிருந்தேனே?”
அவருடைய மாப்பிள்ளை சென்ற ஆண்டு குடிநோயாளியாக மாறி, வயிறு வீங்கி, ரத்தவாந்தி எடுத்து, இளம் மனைவியையும் பிஞ்சுபிஞ்சாய் இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு அகாலமாய் செத்ததிலிருந்து, தூசி விழுந்து யாருக்காவது கண்கள் சிவந்துபோனால்கூட, ‘குடி கேஸ்தான்’ என்கிற தீர்மானத்தில், ‘நல்ல பையன்னு நினைச்சிருந்தேனே… வாட்ஸ் ராங்?’ என்ற கேள்விதான்.
மதியம் ஆவதற்குள் வேலைகளை ஒழுங்காகக் கவனிக்க முடியாமல் கண்கள் ஒரேயடியாய் எரிந்தன. இமைகள் திறக்க மறுத்தன. சிந்தனை தெளிவில்லாமல் கன்னாபின்னாவென்று ஓடியது.
பீச்சில் காற்றாட உட்கார்ந்துவிட்டு, இருட்டிய பிறகு லாட்ஜுக்குத் திரும்பிய போது, அவன் ஏகத்துக்கு ஓய்ந்திருந்தான். உள்ளே நுழையவே தயக்கமாக இருந்தது. மின்விசிறியையோ விளக்கையோ போடாமல் கொஞ்ச நேரம் சும்மா உட்கார்ந்தான்.
பிறகு மெதுவாக எழுந்து விளக்கை ஏற்றிவிட்டு, கூசின கண்களை வெளிச்சத்துக்குப் பழக்கி மெதுமெதுவாக அவன் நிமிர்ந்தபோது, எங்கிருந்தோ பறந்துவந்த பட்டாம்பூச்சி, பரிச்சயமாகிவிட்ட தைரியத்தோடு ட்யூப் லைட்டின் விளிம்பிலேயே அமர, விளக்கின் அடிப்பக்கத்தில் சாமர்த்தியமாய் மறைந்திருந்து விட்டு சரக்கென்று வெளிப்பட்ட சாம்பல் பல்லி, கண்மூடித்திறக்கும் அவகாசத்தில் அதை நோக்கித் தாவ…
முக்கோணமாய், குறுக்கே கோடு கிழித்த அரை உள்ளங்கை சைஸில் தெரிந்த பட்டாம்பூச்சியின் உடம்பில் பாதிப்பகுதி காணாமல்போயிற்று… மரண அவஸ்தையில் துடித்த மிகுதியை, தலையை உதறி நான்கு விழுங்கலாய் விழுங்க… எண்ணி சில கணங்கள் நகர்வதற்குள் அந்தப் பட்டாம்பூச்சி இருந்த சுவடு தெரியாமல் மறைந்தது மாயமாக.
அவன் எதையுமே சிந்திக்க, செய்ய, தோன்றாத மாதிரி செயலிழந்து போனான். உடம்பு விறைத்தது. பிடறியில் வியர்த்தது. அடிஉதட்டை நாவால் மெதுவாக ஈரமாக்கி மூச்சை இழுத்து வெளியிட்டான். பின்னர் தலையைக் குனிந்தவண்ணம் கட்டிலை நெருங்கி மெள்ளக் காலை நீட்டிப் படுத்துக் கொண்டான்.
சில நிமிடங்களில், இன்னும் சாப்பிடாததையோ, விளக்கை அணைக்காமல் இருப்பதையோ குறித்து அலட்டிக்கொள்ளாமல், நிம்மதியாய் உறங்க ஆரம்பித்தான்.
– 1992

One Comment on “சிவசங்கரி/பட்டாம்பூச்சியும் தூக்கமும்”
Comments are closed.