
மாலை வெயில் உடம்புக்கு இதமாக இருந்தது. ஜிலுஜிலுவென்று விசிய காற்றை அனுபவித்தவண்ணம், அலைகள் அடித்து ஓயும் மேட்டில், நுரையுடன்கூடிய நீர் கால்களை வருடிக்கொடுக்க சில நிமிஷங்கள் நின்ற ரமணன், கொஞ்சம் நடந்து ஒருபக்கமாய் உட்கார்ந்துகொண்டான்.
சற்றுத் தொலைவில் ஒரு இளம் ஜோடி. அவளுக்குத் தண்ணீர் என்றால் பயம் போலிருக்கிறது. வரமாட்டேன் என்று சண்டி பண்ணியவளை ‘நான் இருக்கும்போது என்ன பயம்’ என்கிற தினுசில் அணைத்து தண்ணீரிடம் இழுத்துச் செல்கிறான் அவன். அலைகள் வந்து காலில் மோதும் சிலிர்ப்பில் அவள் துள்ளுகிறாள். அவன் இதுதான் சாக்கு என்று இன்னும் இறுக அணைக்கிறான். அவள் சிணுங்குகிறாள்… அப்புறம் அந்த அணைப்பை ரசிக்கிறாள்.
என்ன அன்னியோன்னியம்! என்ன பரவசம்!
இந்த மாதிரி ஒரு நாளாவது, வத்ஸுவோடு பீச்சில் உட்கார்ந்து, நிலா உதயமாகும்வரை சல்லாபிக்க வேண்டும் என்று அவனுள்ளும் ஆசை பூதமாகத்தான் படர்ந்திருக்கிறது. ஆனால் நடப்பதற்குத்தான் வழியைக் காணோம்.
சொன்னால் சிரிப்பார்கள்… கல்யாணமாகி முழுசாய் மாசம் ஒன்று பூர்த்தியாகிவிட்டது, இன்னும் ஒரு மாலைப்பொழுதைக்கூட – ஒரே ஒரு சாயங்கால வேளையைக்கூட – அவன் வத்ஸுவோடு தனியாய்க் கழிக்க முடியவில்லை என்பது நிஜம்தான்.
வத்ஸு… அவனுடைய வத்ஸுக்குட்டி…
தேய்த்துவைத்த வெங்கலக் குத்துவிளக்கு மாதிரி, அவள்தான் எத்தனை அழகு! சாட்டைசாட்டையாய் கை, கால்கள், அளவான உடற்கட்டு, காம்பஸ் வைத்து வரைந்த மாதிரியான வட்ட முகம், சொப்பு வாய்… அப்புறம்…
ஹோ! எதைச் சொல்ல எதை விட!
“எனக்கு இப்ப கல்யாணத்துக்கு என்ன முடை? விலைவாசி விக்கற அழகுல, குடும்பத்தை உன்பாடு என்பாடுனு கரையேத்தினா போதும்னு இருக்கறப்ப, புதுசா ஒருத்தியைக் கூட்டிண்டுவந்து அவ பொறுப்பையும் என்னத்துக்காக சுமக்கணும்?”
இரண்டு மாசங்கள் முன் அம்மா ‘நல்ல இடம் ஒண்ணு வந்திருக்குடா, ரமணா’ என்றபோது, எப்போதும் சொல்லும் சாக்கைச் சொல்லி அவன் தட்டிக் கழிக்கவே பார்த்தான்.
“நன்னா இருக்குடா, நீ சொல்றது! குடும்பம்னா ஆயிரம் இருக்கத்தான் செய்யும்… வாசப்படி இல்லாம வீடு ஏது? அதுக்காக கல்யாணம் வேண்டாம்னா எப்படி? உனக்குன்னு ஒருத்தி வந்து, உனக்குன்னு ஒரு குழந்தை காலாகாலத்துல பிறக்க வேண்டாமா? இந்த மாசியில உனக்கு முப்பத்திநாலு முடியறது! இன்னும் எத்தனை வருஷம் போகணுங்கறே? நல்ல எடம், பொண்ணு கண்ணுக்கு நன்னா இருக்கா… ஏதோ நம்ம அந்தஸ்துக்குத் தகுந்தாப்பல சீர்செனத்தி செய்யறேங்கறா… பொண்ணைப் பாக்காமலே மாட்டேன், வேண்டாம்னா எப்படிடா?”
மேற்கொண்டு அம்மாவோடு தர்க்கம் பண்ண விரும்பாமல் “சரி, சரி… தொணதொணக்காதே! பொண்ணுபாக்க வரணும், அவ்வளவுதானே? வரேன்…” என்று சொன்னாலும், மனசுக்குள், ‘பெண் கறுப்பு, குட்டை, முகத்தில் அசடு வழிகிறது’ என்று எதையாவது சொல்லி இத்தனை வருஷங்களாய்ப் பல இடங்களைத் தட்டிக்கழித்தது போல இதையும் உதறிவிடலாம் என்ற நம்பிக்கைதான் ரமணனுக்கு.
பின்னே? கல்யாணம், அது இது என்பதற்கெல்லாம் ஆசைப்படும் ஸ்திதியிலா அவன் இருந்தான்?
அப்பா இல்லாத குடும்பம்.
கணவனை இழந்து, சின்னப் பிள்ளை கண்ணனோடு அம்மா வீட்டில் நாலாம் வருஷம் தஞ்சம் புகுந்துவிட்ட அக்கா லக்ஷ்மி; பி.காம் படிக்கும் தம்பி சங்கர்; எஸ்.எஸ்.எல்.சி. யில் கெளரி – தங்கை; அம்மா; வீட்டின் சீமந்த புத்திரனான இவன்…
இத்தனை பேர்களும் மானமாய் வாழ வழிபண்ணுவது, இவன் கிளார்க் உத்தியோகம் பார்த்து கொண்டுவரும் நானூற்றிப் பத்தும், அக்கா டீச்சராய்த் தொண்டைத் தண்ணீர் வற்றக் கத்தி சம்பாதிக்கும் நூற்றி அறுபதும்தானே!
இதில்தான் சாப்பாடு, வாடகை, மற்ற போக்குவரத்துக்கள். இதில் மிச்சம் பண்ணித்தான் கெளரிக்கு ஒரு வழி செய்யவேண்டும். திடுமென்று வியாதி, உடம்பு என்றால் சமாளிக்கத் தெரியவேண்டும். எவ்வளவு இல்லை!
வாடகையே பகாசூரன் மாதிரி நூற்றி நாற்பதை விழுங்குகிறதே என்று முணுமுணுப்பதில் அர்த்தம் கிடையாது… மைலாப்பூர் மாடவீதியில் குடித்தனம் பண்ணுவதற்கு இது ரொம்ப மலிவுதான். அப்பா இருந்த நாட்களிலிருந்து – கிட்டத்தட்ட பதினைந்து வருஷங்களாய் – இந்த போர்ஷனிலேயே இருப்பதால், வீட்டுக்காரர் தாறுமாறாய் வாடகையை ஏற்றாமல் இருக்கிறார்.
கடை, கண்ணி, கோவில், பஸ் ஸ்டாப் எல்லாம் கிட்டத்தில் என்ற செளகரியம் இருந்ததே தவிர, இடம் என்னவோ ரொம்பச் சின்னதுதான். மாடி ஏறினால், ஒரு சின்ன நடை. தொடர்ந்து பெரிசாய்க் கூடம். பின்னால், சமையல்கட்டு. அதையும் தாண்டி தனி குளியலறை, டாய்லட்.
தனக்கு இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாம் என்று ரமணன் மறுத்ததற்கு இந்த வீடும் ஒரு காரணமே. இருப்பதோ ஒற்றைக் கூடம்… சாப்பாடு, படுக்கை, படிப்பு – எல்லாம் இதில்தான் என்றிருக்க, புதுசாய்க் கல்யாணம் பண்ணிக்கொள்கிறவர்களுக்கு ஏது இடம்!
வாச நடையில் படுத்துக்கொள்ளலாம் என்றால், அதற்குக் கதவு கிதவு ஒன்றும் கிடையாது. சமையல்கட்டை உபயோகிக்கலாம் என்றால், இரவில் பாத்ரூம் போகிறவர்கள் அந்த அறை வழியாகத்தான் போகவேண்டும்.
அப்புறம் எப்படி?
இத்தனை வருஷங்களாய் அம்மாவை சமாளித்த தினுசில் இந்த முறையும் ஏய்த்துவிடலாம் என்ற ரமணனின் எண்ணத்திற்கு பெப்பே காட்டிய பெருமை, வத்ஸலாவின் லட்சணமான தோற்றத்தையே சாரும்.
நிமிர்ந்து பார்த்தவன், பிரமித்துதான் போனான்.
இத்தனை அழகையும் கட்டியாளும் பாக்கியம் எனக்கா! இந்த வெள்ளைத் தோலும் செதுக்கின உடம்பும், எனக்கா!
மனசில் அடியில் உறங்கிக்கொண்டிருந்த ஏக்கங்கள் மெதுவாய் விழித்துக் கொள்ள, அன்றிரவு அம்மாவிடம் சம்மதத்தைத் தெரிவிக்க, இதோ, வத்ஸு இவன் மனைவியாகி மாசம் ஒன்று ஓடிவிட்டது.
கல்யாணம் நிச்சயமான கையோடு அம்மா ஒரு தச்சரை அழைத்து, பத்து கள்ளிப்பெட்டிகளை வாங்கிவந்து, கூடத்தில் எட்டடிக்கு எட்டடி என்று சின்னதாய் ஒரு தடுப்புச்சுவர் எழுப்பச் சொன்னாள்.
கல்யாணமான மறுநாள் கட்டுச்சாதக் கூடையுடன் வந்திறங்கின பிறகு, இதுதான் இவர்கள் அறை ஆயிற்று.
இரண்டு பெட்டிகளை ஓரமாக வைத்து, சம்பந்தி தைத்துத் தந்திருந்த மெத்தைகளை விரித்து, நாலு மல்லிகைச் சரங்களைக் குறுக்கும் நெடுக்கும் கட்டி, ஊதுபத்தி கொளுத்தி, கூஜாவில் பால், தட்டில் பழம், ஜாங்கிரி வைத்து அம்மாவும் அக்காவும் ஜோடித்திருந்த இந்த அறையில்தான், அவர்களுடைய சாந்தி முகூர்த்தம் நடந்தது.
மேல்விட்டம் வரைக்கும் உயராத ஆறடி மரத்தடுப்பு என்பதால், சின்னக் குரலில் பேசினாலும் வெளியில் கேட்டுவிடும் என்ற பயம்.
விளக்கைப் போட்டுக்கொண்டு, நடையில் பரீட்சைக்குப் படிக்கும் சங்கர். அதே கூடத்தில், மருமானை அணைத்தபடி தூங்கும் கெளரி. பத்தடி தள்ளி இருந்த சமையல்கட்டில் அம்மா, அக்கா.
முதலாவது, இரவாவது… மண்ணாங்கட்டி! என்னவோ தப்புப் பண்ணுவது போல… ச்சே! என்ன வேண்டிக்கிடக்கிறது!
நாலு நாட்கள் ஆவதற்குள் சலிப்பும் ஏக்கமும் மொத்தமாய் ஆட்டுவிக்க, ரமணி சதா மனசுக்குள் குமையத் தொடங்கியது வாஸ்தவம்.
பந்தாய் மனைவி பூச்சூடி வர, அதில் முகம் பதித்து மகிழ்ந்தால் எப்படியிருக்கும் என்பதைக் கற்பனை பண்ணுவதோடு நிறுத்திக்கொள்ள, அவன் பழகிக்கொண்டான்.
ஒரு ரூபாய்க்குப் பூ வாங்கினாலும், சாமி படங்களுக்குக் கொஞ்சம், கெளரிக்குக் கொஞ்சம் என்று போனால், பாக்கி விரக்கடை அளவுதானே வத்ஸுவுக்குத் தேறும்? அப்புறம் பெரிசாய் பூ என்ன!
சினிமாவுக்கு மனைவியை அழைத்துப் போகவேண்டும் என்று ஏகத் துடிப்பு… ஆனால், முடியுமா? அம்மா, அக்கா, தம்பி கிளம்பாவிட்டாலும், கெளரியும் கண்ணனும் முதலில் தயாராவது நிச்சயம். புது மனைவியுடன் முதல் சினிமா… பால்கனி டிக்கெட் எடுக்காவிட்டால் எப்படி? நாலு இரண்டரை ரூபாய் டிக்கெட் எடுத்தால், பத்து ரூபாய். அப்புறம் போகவர பஸ் செலவு. அங்கு பாப்கார்ன், சோடா என்று எதையாவது கண்ணன் இழுத்துவிடும் செலவு… ஆக, இருபது பழுத்துவிடும். அப்பாடி! இருபது ரூபாயா? இருந்தால், நாலு கிலோ துவரம்பருப்பு வாங்கலாமே!
பீச், கோவில் போகப் பணம் காசு வேண்டாமே, போய்வரலாமே என்றால், அத்தனை பேர்கள் இருக்கும் வீட்டில் ஒருத்தியை மட்டும் பார்த்து ‘நீ கிளம்பு’ என்று எப்படிச் சொல்வது? நா கூசுகிறதே! குழந்தைக்குட்டிகளை வீட்டில் விட்டு விட்டு அப்படியாவது என்ன பீச்… என்று மனசில் என்னவோ நெருடுகிறதே!
என்ன கல்யாணம், என்ன பெண்டாட்டி! நினைத்தபோது மனைவியின் கையைப் பிடித்து சீண்ட முடிவதில்லை, நினைத்தபோது ஒரு வார்த்தை பேச முடியவில்லை. இதெல்லாம்கூட வேண்டாமய்யா, ராத்திரி படுக்கும்போது நாள் பூராவும் பிரிந்திருந்துவிட்டுப் புது மனைவியோடு சேர்ந்து இருக்கும்போது, மனுஷன் ஒரு கொஞ்சலான வார்த்தை சொல்லி, விளக்கு வெளிச்சத்தில் அவள் முகத்தைக் கையில் ஏந்தி ரசிக்க முடியவில்லை என்றால்… அப்புறமென்ன கல்யாணம் வேண்டிக்கிடக்கிறது!
கிசுகிசுப்பாய்க் காதுக்குள் “வத்ஸும்மா… என்னோட வத்ஸுக்குட்டி…” என்றால், “ஐயோ, வேண்டான்னா… அவாள்ளாம் இருக்கா…” என்பாள். “உன் பட்டுக் கைக்கு இந்த மருதாணிச் சிகப்பு எத்தனை…” முடிக்க விடமாட்டாள். “ஐயய்யோ… வெளக்கை அணைச்சுடுங்கோ… பலகைல இடுக்கு இருக்கு…” ரகசியமாய் பதில் வரும். உடம்பு விலகிப்போகும்.
ச்சே… என்ன தாம்பத்தியம்டாப்பா…
ருசி காணாதவரை எந்தக் கஷ்டமும் இல்லை. ஆனால் இப்போது எத்தனை வேதனை, எத்தனை அவஸ்தை…
இருட்டிவிட்டது. ரமணன் மணலைத் தட்டிவிட்டுக்கொண்டு எழுந்தான்.
சலிப்பு மாறாத மனசுடனேயே நடந்துபோய் வீட்டு மாடிப்படிகளில் அவன் ஏறும்போது, ஏழடிக்க ஐந்து நிமிஷங்கள் இருந்தன.
வழக்கத்துக்கு மாறாக, வாசக்கதவு தாளிடப்பட்டிருந்தது. தட்டினான்.
“யாரு?” ஜன்னல் வழியாக நிலாவாக வத்ஸுவின் முகம்.
“நாந்தான்…”
கதவு திறந்தது.
“எதுக்காகக் கதவைத் தாள் போட்டிருக்கேள், சந்தியாவேளைல? இத்தனை பேர் இருக்கற வீட்டுல, எவன் திருட தைரியமா நுழைவான்?” பேசிக்கொண்டே சட்டையைக் கழட்டினவன், நிமிர்ந்து நன்றாய் மனைவியைப் பார்த்தபோது, அந்த முகத்தில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது.
முகம் பளிச்சென்று அலம்பிப் பவுடர் பூசப்பட்டிருந்தது. வட்டமாய்ப் பொட்டுக்கள், ஓரங்களில் மைத்தீற்றல். என்னவோ சொல்லத் துடிக்கும் வாய்… அலாதித் துறுதுறுப்பு… என்ன சமாச்சாரம்?
ரமணன் கூடத்தைப் பார்வையிட்டான்.
அம்மா எங்கே? ஓரமாய் உட்கார்ந்து தினமும் வயர்கூடை பின்னும் அக்கா எங்கே? நடையில் நின்று போவோர் வருவோரை விமர்சிக்கும் கெளரியும், ‘மாமா, பிஸ்கெட் வாங்கிண்டு வந்தியா?’ என்று மறிக்கும் கண்ணனும், எங்கே?
கண்ணன் பள்ளிக்கூடத்தில் பெற்றோர் தினமாம்… அக்கா கெளரியுடன் போயிருக்கிறாளாம். சங்கர், கீழ்வீட்டு மாமாவுடன் ஆர்.ஆர். சபாவில் ஓசி நாடகம் பார்த்துக்கொண்டு… அம்மா கோவிலுக்கு – வாரியார் கதை.
வத்ஸு பேசி முடிப்பதற்குள், இதயத்துக்குள் ஏதோ ஜிங்கென்றது ரமணனுக்கு.
அப்படியென்றால்… வீட்டில் அவனும் அவளும்தானா?
கடவுளே! ஒரு மாசமாய் தவம் பண்ணிய சமயம் கண்முன் நின்று, வா வா என்கிறதா! கால்மணி நேரமாய் வத்ஸு தனியாய் இருந்திருக்கிறாளா? பதினைந்து நிமிஷங்கள் அநியாயமாய் வீணானவா?
சடக்கென்று வத்ஸுவை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான். “நீயும் நானும் மட்டுமா இருக்கோம், வத்ஸும்மா? நாம மட்டுமா?” திரும்பத்திரும்ப சந்தோஷம் தாங்காமல் கேட்டவன், என்னவோ நினைத்துக்கொண்டது போல பர்ஸை எடுத்தான்.
ஐந்து ரூபாயும் கொஞ்சம் சில்லறையும் இருந்தன.
சட்டையை அவசரமாய் மாட்டிக்கொண்டு, “கதவைத் தாள் போட்டுக்கோ, இதோ வந்துடறேன்…” என்ற சொல்லி இரண்டு எட்டு போனவன், நின்றான். திரும்பி வந்து மனைவியின் கையைப் பற்றி லேசாய் அழுத்தி, “இதோ ஓடி வந்துடறேன்… நீ அதுக்குள்ள, நலங்குக்குக் கட்டிண்டியே, அந்த நைலான் புடவையக் கட்டிண்டு ஜம்முனு இரு… என்ன?” என்று கூறிக்கொண்டே, நாலுநாலு படிகளாய்க் கீழே இறங்கி ஓடினான்.
ஒரு ரூபாய்க்குப் பூ… திருநெல்வேலி அல்வா நூறு கிராம்… பக்கோடா கால் கிலோ… போதும்.
பொட்டலங்களோடு ஓட்டமும் நடையுமாய் வந்தவன், சலூனைத் தாண்டிய போது ஒரு வினாடி தாமதித்தான்.
சின்னதாய் ஒரு ஷேவிங்? ம்ஹூம், அரைமணியாவது பழுத்துவிடும்… வேண்டாம்.
மூச்சிறைக்க இறைக்க மாடிப்படிகளில் ஏறி, கதவைத் தட்டினான்.
அவன் விருப்பப்பட்டது போல, வத்ஸு கிளிப்பச்சை நைலானில் குளுகுளுவென்று இருந்தாள்.
பரபரப்புடன் குளியலறைக்கு ஓடி நாலு சொம்பு விட்டுக்கொண்டான். பவுடர் பூசி, தலைவாரி, சலவை வேஷ்டி, பனியன் அணிந்துகொண்டு, கூடத்துக் கட்டிலில் அமர்ந்தான்.
அவனுடைய செய்கைகளை வெட்கத்தோடு பார்த்தபடி நின்றிருந்த மனைவியை இழுத்து, கிட்டத்தில் அமர்த்திக்கொண்டான். மார்பு படபடவென்றது. சின்னப்பையனின் குறுகுறுப்பு… துடிப்பு…
“வத்ஸும்மா, என்னோட வத்ஸுக் கண்ணம்மா…னு ஆசையா கூப்பிட்டா, இப்ப ‘ஷ், ஷ்’னு அடக்க மாட்டியோன்னோ?” என்றான்.
“அம்மாடி… இந்த அழகை விளக்கு வெளிச்சத்துல பக்கத்துல உக்கார வெச்சுண்டு, கண்குளிரப் பாக்கணும்னு எத்தனை நாளா ஆசைப்படறேன்!” என்றான்.
“ஒண்ணுமே பண்ணவேண்டாம், வத்ஸு… உன்னைத் தோள்ல சாய்ச்சிண்டு, பயமில்லாம பேசி சிரிச்சிண்டு, உன் மருதாணி பூசின விரலை என் கையோட கோத்துண்டு அப்படியே மணிக்கணக்கா உக்காந்திருக்கணும்… அப்பறம் வந்து…”
“டீ, வத்ஸலா…” வீட்டுக்கார மாமி குரல் திடுமென்று கீழிருந்து கேட்க, வத்ஸு எழுந்து நின்றாள்.
“உங்காத்துக்கு விருந்தாளி வந்திருக்காடீ…”
வத்ஸலா ஜன்னலிடம் செல்ல, ரமணனும் உடன் சென்று எட்டிப் பார்த்தான்.
மாமா…
“மாமா, வத்ஸு… இப்பப்போயி… இவர்… கடவுளே…”
ரமணனின் குரல் உடைந்திருந்தது.
“யாரு? அப்பா போன சமயத்துல உபகாரமா இருந்தார்னு அம்மா சொல்வாளே, அவரா? லீவு கிடைக்காததுனால வடக்கேந்து கல்யாணத்துக்கு வர முடியலைன்னாரே, அவரா?”
ரமணன் ஆமாம் என்று தலையாட்டினபோது அவன் முகத்தில் ஏமாற்றம் கூத்தாடுவதை, ஆசைகள் கருகிப்போன வலியில் கண்கள் கலங்குவதை, வத்ஸுவால் பார்க்க முடிந்தது.
கையை நீட்டி, கணவனின் கன்னத்தை இதமாகத் தடவிக்கொடுத்தாள்.
“என்னன்னா இது! சின்னக்குழந்தை மாதிரி இதுக்குப் போய் வருத்தப் படறேள்? நாம்பதான் ஆயுசுபர்யந்தம் சேந்து இருக்கப்போறோமே, அப்பறம் இன்னிக்கு இல்லேன்னா இன்னொரு நாள் வராமயா போயிடும்? போங்கோன்னா… போய், வந்த பெரியவரை வாங்கோன்னு சொல்லி அழைச்சிண்டு வாங்கோ…”
தன்னைவிட எட்டு வயசு சின்னவளாக இருந்தாலும், சமயம் அறிந்து, ஒரு தாயாக மாறி, அனுசரணையுடன், விவேகத்துடன் மனைவி பேசியதும், ரமணனின் மனசு சட்டென்று தெளிந்துபோனது.
இந்த மாதிரி, நொடியில் அனுசரித்துப்போவது, இந்தப் பெண்களுக்கே கைவந்த கலையா? இப்படி விட்டுக்கொடுக்கவேண்டிய சமயத்தில் விட்டுக் கொடுத்து, தட்டிக்கொடுக்கவேண்டிய தருணத்தில் தட்டிக்கொடுத்து, தாம்பத்தியத்தை இனிமையாக ஓட்டிச்செல்வது, இந்தப் பெண்களால் மட்டுமே செய்யக்கூடிய காரியமா?
எட்டி மனைவியின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு, “நீ சொல்றது சரிதான்… இன்னொரு நாள் வராமயா போயிடும்!” என்று சின்னக்குரலில் சொல்லி விட்டு, மாமாவை வரவேற்கக் கதவைத் திறந்துகொண்டு ஓடினபோது, மனசு விவரிக்கத்தெரியாத சந்தோஷத்தோடு இருப்பதை ரமணனால் புரிந்துகொள்ள முடிந்தது.
– 1978.

One Comment on “சிவசங்கரி/இன்னொரு நாள்”
Comments are closed.