
பூட்டியிருந்த கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தபோது. வீட்டில் நிலவிய அமைதி சங்கடப்படுத்தியது. கிழவி இருந்தால் இப்படிப் பூட்டியும் இருக்காது, மயான அமைதியுடனும் இருக்காது. செருப்பை உதறி, இருட்டில் சுவரைத் தடவி, விளக்கை ஏற்ற முனைகையில், காலடியில் எதுவோ மிதிபட்டு ‘ஙே’ என்று பரிதாபமாய் குரலெழுப்பியது.
சின்னப் பையனின் ரப்பர் பொம்மை! குனிந்து எடுத்ததை. மேஜை மீது வீசினான். பெண்டாட்டியையா அல்லது மனதில் மண்டிய எரிச்சலையா என்று விளங்காமல், பொதுவாக “சனியன்!” என்று முணுமுணுப்பாய் வைதான்.
கோட் ஸ்டாண்டில் சட்டையை மாட்டியபோது, அருகிலிருந்த டிவியின் உச்சியில் காணப்பட்ட சீட்டு பார்வையில் விழுந்தது. எடுத்துப் படித்தான்.
‘எதிர்வீட்டு பர்வதம் அக்காவுடன் மாலை ஆட்டத்துக்குப் போகிறேன். சமையல்கட்டு மேடையில் டிபன் வைத்திருக்கிறேன்’.
இந்த முறை மனைவியை மனதில் நிறுத்தி மறுபடியும், “சனியன்!” என்று உரக்கத் திட்டியவன், காகிதத்தைக் கசக்கி மூலையில் எறிந்தான். சற்றுத் தள்ளி விழுந்தது, இரண்டு தரம் அப்படியும் இப்படியும் உருண்டுவிட்டு நின்றது.
இவளுக்கு வேறென்ன வேலை! ஊரில் ஒரு கொட்டகையில் புதுப்படம் ரிலீஸ் ஆகக்கூடாது… இரண்டு நாட்களுக்குள் பார்க்காதுபோனால், தலை வெடித்து விட்ட மாதிரி ஓயாமல் புலம்புவாள்!
‘போன வாரம்தானே ஒரு படம் பார்த்தாய், அதற்குள் இன்னொன்றா?’ என்றால்கூட, என்னவோ கேட்கக்கூடாததைக் கேட்டுவிட்டதுபோல பத்ரகாளியாய் குரலெடுத்துக் கத்துவாள்.
“ஊர் உலகத்துல ஒவ்வொரு புருஷன் பொண்டாட்டியத் தாங்கற மாதிரி, நீங்க எதனாச்சும் செய்யறீங்களா? கேவலம் சினிமா… இதக்கூடப் பார்க்கக் கூடாதுன்னு சொன்னா எப்படி? ஜெயில் கைதியாட்டம் நாள் பூரா விட்டுலயே அடைஞ்சுகிடக்கச் சொல்றீங்களா? பெரிசா வி.சி.ஆர். வாங்கிப் போட்டு, கேபிள் டி.வி.க்கும் கனெக்ஷன் குடுத்துட்ட மாதிரி, என்ன பேச்சு இது! அதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க, அப்பறம் நா வெளிய காலடி எடுத்து வெச்சா ஏண்டீன்னு கேளுங்க!”
ஆமாமாம், கேட்க வேண்டியதுதான்! போன வருடம் வரைக்கும், “கால் காசு பொறாதவளெல்லாம் கலர் டி.வி. வெச்சுகிட்டு பெருமைப்பட்டுக்கறா… வசதியான குடும்பத்துல பொறந்தும், தாலிகட்டினவருக்குத் துப்பில்லாததால, பிளாக் அண்ட் வொயிட் டிவியக் கட்டிக்கிட்டு மாரடிக்கணும்னு என் தலைல எழுதியிருக்கு!” என்று வாய் ஓயாமல் புலம்பினது தாளமுடியாமல்போக, கலர் டிவி வாங்கியாயிற்று.
இப்போது வி.சி.ஆர்., கேபிள் டிவி! இவற்றை உன்பாடு என்பாடு என்று சாதித்துக்கொண்ட பிறகு, புதிதாய் இன்னொரு புலம்பல் கிளம்பும்.
புலம்பல், புகார் சொல்லுதல், அடுத்தவரைப் பழித்தல்… இவை தவிர கமலத்திற்கு வேறென்ன உருப்படியாய் செய்யத் தெரியும்?
பேண்ட்டைக் கழற்றி, வேட்டி உடுத்திக்கொண்டவன், பின்கட்டுக்குச் சென்று குளியலறையில் குளிர்ந்த நீரை முகத்தில் வாரியடித்துக்கொண்டான்.
வேட்டியைத் தூக்கித் துடைத்துக்கொண்டே சமையலறைக்கு வந்து, மேடை மேல் தட்டுப் போட்டு மூடி வைத்திருந்த பாத்திரத்தைத் திறந்து பார்த்தான்.
காய்ந்து, தீய்ந்து, ஆறி, வறட்டி போலிருந்த தோசைகளைப் பார்க்கவே பிடிக்காமல்போக, அடங்கியிருந்த எரிச்சல் மீண்டும் தலைதூக்கியது.
பசி அதிகமாய் இருந்ததில், ஃபிளாஸ்கில் சூடு இல்லாமல், பூனை மூத்திரம் மாதிரி வெதவெதத்த காபியை மட்டும் டம்ளரில் ஊற்றி நான்கு வாயாகக் குடித்தான்.
அலுப்புடன் முன்னறைக்கு வந்து, கட்டிலில் காலை நீட்டிப் படுத்தான்.
கிழவி இருந்தால், இந்தத் திண்டாட்டம் இல்லை.
விளக்கை ஏற்றிவிட்டு, இவன் வருகைக்காக வாசப்படியிலேயே கதவைத் திறந்து வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். இவன் தலையைக் கண்டதும், ‘கை காலக் கழுவிட்டு வா, தம்பி… சூடா தோசை சுட்டுப் போடறேன்’ என்றவாறு எழுந்து கூடவே வருவாள். ‘இன்னும் ஒண்ணு சாப்பிடு, தம்பி… நாள் பூரா வேலை செஞ்சு களைச்சு வர்ற பிள்ளை, வயத்துக்கு சரியா சாப்பிடாட்டி எப்படி?’ என்று மன்றாடி சாப்பிட வைப்பாள்.
படுக்கையில் ஏதோ உறுத்தியது. எழுந்து உட்கார்ந்து என்னவென்று தடவிப் பார்த்தான். ஒன்றுமில்லை. மறுபடி படுத்தான்.
கிழவி இருந்தவரையில், வீடு இப்படி கந்தரகோலமாய் ஒருநாள் இருந்து இவன் பார்த்ததில்லை. முடிகிறதோ இல்லையோ, இரண்டு வேளையும் பெருக்குவாள்; செவ்வாய், வெள்ளி மெழுகுவாள்; படுக்கை விரிப்பைத் தட்டிப் போடுவாள்; சின்னப்பையனின் விளையாட்டுச் சாமான்களை ஓரிடமாய் அடுக்கி வைப்பாள்; மாலை வேளைகளில் காமாட்சி விளக்கை ஏற்றிவிட்டு, சின்னப் பையனை அருகில் அமர்த்திக்கொண்டு ராமாயண, மகாபாரதக் கதைகளைச் சொல்லுவாள்.
இவை மட்டுமல்லாது, காலையில் வெள்ளன எழுந்து பால் வாங்கிவருவது, சமையலுக்குக் காய் அரிந்து, அரைத்துக் கரைத்துக் கொடுப்பது எல்லாம்கூடக் கிழவியின் வேலைதான்.
இத்தனை செய்தும், கமலத்தின் வாயில் கிழவி விழுந்து புறப்படாத நாளே இல்லை.
“விடிஞ்சதும் விடியாததுமா பாலை வாங்க, கிழம் ஏன் ஓடுது தெரியுமா? அதுக்குக் கண்ணத் தொறந்த உடனேயே காபி வேணும்! இருட்டுல தடுக்கி எங்காச்சும் விழுந்து கை கால் ஒடஞ்சு படுத்துகிட்டா, அதுக்குப் பணிவிடை பண்ண என்னால முடியாது, சாமி! இப்பவே வேலை இடுப்பு விட்டுப்போவுது!” என்பாள்.
“இந்தக் கிழத்தைக் கொஞ்சம் அதட்டி வையுங்க… வீட்டைக் கூட்டறேன் மொழுகறேன்னு, இதத் தூக்கி அங்க, அத எடுத்து இங்க வெச்சு, பெரிய்ய்ய்ய ரோதனை பண்ணுது! நேத்து மூணாவது வீட்டு தர்மு அக்கா, ‘ராணி புஸ்தகம் குடுத்தேனே, எங்கடீ?’ன்னு கேட்டாங்க… தேடி எடுக்கறதுக்குள்ள போதும்போதும்னு ஆயிடுச்சு! ராமா ராமான்னு சொல்லிகிட்டு மூலைல விழுந்து கெடக்காம, சின்னப் பொண்ணா நினைச்சுகிட்டு கிழவி அடிக்கற கூத்து சகிக்கலைங்க!” என்பாள் மறுநாள்.
சொல்கிறாளே என்று அதிசயமாய் கிழவி கோவில் குளத்துக்குக் கிளம்பி விட்டால், அதையும் பழிக்காமல் கமலம் விடமாட்டாள்.
“சாமி பாக்கவா இந்தக் கிழம் போவுது! எவ கிடைப்பா வம்பு பேசன்னு இல்ல கோவிலைத் தேடி ஓடுது!” என்பாள்.
இல்லாவிட்டால், “காலைலேந்து தலைவலின்னு அவஸ்தைப்பட்டுகிட்டு இருக்கேன்… ராத்திரி சமையல் செய்ய ஒத்தாசை பண்ணாம, தன் பாட்டுக்குக் கிழம் வெளிய போயிடுச்சு, பாருங்க!” என்று பல்லைக் கடிப்பாள்.
அத்தனைக்கும், வாயைத் திறந்து இவன் ஒரு வார்த்தை பதில் சொன்னவனில்லை. திருமணமான இந்த ஐந்து வருஷங்களில் கமலத்தின் குணம் நன்றாகவே புரிந்து, இவன் ஒன்று சொன்னால் அவளிடமிருந்து நான்காக பதில் வரும் என்பதால், வாயை இறுக மூடிக்கொண்டு, யாரோ யாரையோ சொல்கிறார்கள் என்கிற மாதிரி மெளனம் சாதிப்பான்.
ஆனால், அடிக்கிற அடியில் அம்மிக்கல்லே நகரும் என்கிறபோது, இவன் எம்மட்டு!
கமலத்தின் போதனை, காதில் விழுந்து, மனதில் பதிந்து, கடைசியில் அவனும் கிழவியிடம் சொல்லத்தகாத வார்த்தைகளை வீசிவிட்டதுதானே நடந்தது!
நடுமுதுகில் ஏதோ ‘சுரீர்’ என்று குத்த, அவசரமாய் எழுந்து உட்கார்ந்தான்.
பகல்வேளையில் தூங்கி எழுந்த பிறகு, நொறுக்குத் தீனியை தட்டு நிறைய நிரப்பிக்கொண்டு அசைபோட்டவாறு, சினிமா சம்பந்தப்பட்ட பத்திரிகைகளை ஒரு வரி விடாமல் படிப்பது கமலத்தின் மாமூல் வழக்கம். அப்படித் தின்று சிதறிய பலகாரத் துகள்களுக்காகப் படுக்கையை மொய்க்கும் சிற்றெறும்புகள் கடிப்பதால் தான், இந்த வேதனையா?
கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்த வரையில், எதுவும் புலப்படவில்லை.
அரை நிமிஷம் அப்படியே குந்தி, படுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தவன், விளக்கத் தெரியாத அயர்ச்சி ஆளை அழுத்த, மெதுவாகப் படுத்தான்.
சில மாசங்களாகவே, கமலம் சமயம் கிடைக்கும்போதெல்லாம் இவனிடம் ஓதும் விஷயம்தான் அன்று கணப்பொழுதில் விஸ்வரூபம் எடுத்து, இவனையும் விவகாரத்தில் மூக்கைவிடச் செய்துவிட்டது.
“கிழத்தை வெச்சிக்க நமக்கு மட்டும்தானா தலையெழுத்து? கஸ்தூரிக்கு அந்தப் பொறுப்பு கிடையாதா? ‘போய் மூணு மாசம் இருந்துட்டு வா’ன்னு ரெயிலேத்தி அனுப்ப, உங்களுக்கு தைரியமில்ல! கிழம் வீட்டுல இருக்கறதால, ரெண்டு நாள்கூட வீட்டைப் பூட்டிகிட்டு இங்க அங்க போக முடியறதில்லே! நா சொன்னா, கிழம் காதுல வாங்க மாட்டேங்குது… நீங்க எதனாச்சும் சொல்லப் போறீங்களா, இல்லியா?” என்று எப்போதும் அவள் கூறி, இவன் இந்தக் காதால் கேட்டு அந்தக் காதால் விடும் தினுசில் அல்லாது, அன்று மட்டும் சோதனையாய் உள்ளுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் பிசாசு விழித்துக்கொண்டு, கோரப்பற்களும் புலிநகங்களுமாய் வெளிப்பட்டுவிட்டது.
கிழவிக்கு ரத்த அழுத்தக் கோளாறு உண்டு. தினமும் மாத்திரை சாப்பிடும்போதே, சில சந்தர்ப்பங்களில் தலைசுற்றி உட்கார்ந்துவிடுவாள்.
பத்து நாள்களுக்கு முன் ஆபீஸுக்குப் புறப்பட்டவனிடம், “மாத்திரை தீர்ந்து போச்சு, தம்பி… வாங்கிட்டு வர்றியா?” என்று கிழவி கேட்டிருந்தாள்தான். வேலை மும்முரத்தில் மறந்துவிட்டது. அன்றிரவு சாப்பாடாகி கமலத்தோடு டிவி இரண்டாவது சானலில் ‘படமும் பாடலும்’ பார்த்துக்கொண்டிருக்கையில், உள்கட்டு வேலை முடிந்து, ஈரக்கையைத் தலைப்பில் துடைத்தவாறு வந்து நின்ற கிழவி, “மாத்திரை வாங்கிட்டியா, தம்பி?” என்றபோது, உள்ளங்கையால் நெற்றியில் அடித்துக்கொள்வதைத் தவிர அவனால் வேறு எதுவும் செய்ய இயலவில்லை.
படுத்த பிறகு கமலம், “உப்பு இல்லாம கிழவிய இருக்கச் சொல்லுங்க… நாக்கக் கட்டினா தன்னால ரத்த அழுத்தம் சரியாயிடும்!” என்று தெரிந்த மாதிரி பேசியதற்கு, “அப்படி ஒண்ணும் கண்டதத் திங்கறவங்க இல்லியே?” என்று சாதாரணமாய் இவன் பதில் கூறியது தப்பாகிவிட்டது.
“என்ன… என்ன?” என்று கேட்டவாறு எழுந்து உட்கார்ந்தவள், “அப்ப, நா இல்லாததையும் பொல்லாததையும் பேசறேன்னு சொல்றீங்களா?” என்று ஆரம்பித்து மாபாரமாய் சண்டைக்கு வர… அவளைச் சமாதானப்படுத்துவதற்குள் அவன் திண்டாடிப்போனான்.
இறுதியில், கிட்டத்தில் படுக்காமல் தரையில் பாய் விரித்து கமலம் படுக்க, இரவு முழுவதும் இவனுக்கு சரியான உறக்கம் இல்லை.
காலையில் எழுந்திருக்கும்போது, தலை வலியில் நமநமவென்றது. கமலத்தின் தூக்கிய முகம், குழாயில் தண்ணீர் வராத பிரச்சினையோடு, “எழுந்திருக்க முடியாம கண்ண இருட்டிகிட்டு வருது, தம்பி…” என்று கிழவி கைகளில் தலையைத் தாங்கி பரிதாபமாகக் கூறியதும் சேர்ந்துகொள்ள, ஊசிமுனை பட்ட பலூன் மாதிரி சட்டென்று வெடித்தான்.
“வரவர ரொம்பத்தான் மாமாலம் செய்யறே! ஒருநாள் மாத்திரை சாப்பிடாட்டி உசிரா போயிடும்? என்னமோ மறந்திடுச்சு… வேணும்னே வாங்கிட்டு வராம இருந்த மாதிரி நாலு தரம் சொல்லிக்காட்டறியே! சரி, சரி… நா செய்றது பத்தலைன்னா, இங்க ஏன் இருக்கே? முப்பது பவுன் நகை, கையில ரொக்கம் இருவதாயிரம்னு, இருந்ததெல்லாம் கஸ்தூரிக்கு வாரிவிட்டியே? அங்க போய் சொகுசா இருக்கறதுதானே? ஏன் காலைச் சுத்தின பாம்பா என் கழுத்தையே அறுக்கறே?”
தணல் துண்டங்களாய் வார்த்தைகள் வெளியே வந்து விழுந்தபோது, அதன் காட்டத்தை உணர முடியவில்லை. ஆனால் கொஞ்ச நேரம் செல்வதற்குள், ‘அசிங்கமாய் பேசிவிட்டோமே’ என்கிற தவிப்பு உண்டாகவே செய்தது. வாயை மூடிக்கொண்டு, குனிந்த தலையுடன் அறைக்குள் வந்து உட்கார்ந்துகொண்டான்.
ஆபீஸுக்குப் புறப்படும்போது கிழவி எதிரில் வந்து நின்றாள். சின்னக் குரலில் பேசினாள்.
“நீ சொல்றது நியாயம்தான், தம்பி… இங்கயும் அங்கயுமா இருக்கறதுதான் சரி! சாயங்கால வண்டிக்கு டிக்கெட் எடுத்திட்டு, கஸ்தூரிக்கும் தந்தி அடிச்சிடறியா?”
அவசரமாய் மறுக்க நிமிர்ந்தவனால், கிழவிக்குப் பின்னால் நின்றுகொண்டு கமலம் விழிகளை உருட்டி, ‘சரியென்று சொல்லுங்கள்!’ என்று சமிக்ஞை செய்வதைப் புரிந்துகொள்ள முடிய, சும்மா தலையசைத்துவிட்டுப் படிகளில் இறங்கினான்.
பின் இடுப்பில் சுருக்கென்று ஏதோ குத்துவதை, துல்லியமாய் உணர முடிந்தது. புரண்டு படுத்தான். மறுபடியும் சுருக்… மறுபடியும் சுருக்… இங்கே… அங்கே…
என்ன வேதனை இது! துவைத்துவைத்த வேட்டியில், சிராம்பு ஏதாவது ஏறியிருக்குமோ? அதுதான் உறுத்துகிறதோ?
எழுந்து, கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து உதறி உடுத்திக்கொண்டான்.
மீண்டும் படுக்கத் தயக்கமாக இருந்தது.
கூடத்திலிருந்த பிரம்பு நாற்காலியில் வந்து உட்கார்ந்துகொண்டான்.
கஸ்தூரி இருப்பது ஹைதராபாத்தில். கிழவிக்குத் தெலுங்கு ஒரு வார்த்தை தெரியாது. கஸ்தூரி வேலைக்குப் போய்விட்டால், கொட்டுக்கொட்டென்று தனியாய் வீட்டில் இருக்கவேண்டும். பொழுது போவது கஷ்டம். கஸ்தூரி வீட்டில் வடக்கத்திய பாணியில் இரண்டு வேளையும் சப்பாத்திதான். கிழவிக்கு கோதுமை ஒத்துக்கொள்ளாது.
இருப்புக்கொள்ளாமல், இவன் எழுந்து குறுக்கும் நெடுக்கும் நடந்தான்.
‘பத்து நாள்கள் அங்கு இருந்தது போதும், வந்துவிடு’ என்று கடிதம் போடலாமா?
நகத்தைக் கடித்தவாறு யோசித்தபோது, கிழவியைத் திரும்ப கூட்டிவந்து விட்டால் தேவலைபோலத் தோன்றியது. ‘அன்னிக்கு என்னமோ புத்தி கெட்டுப் போய் பேசிட்டேன், மனசுல வெச்சுக்காதே!’ என்று சொல்லிவிட்டால் தேவைலை போலத் தோன்றியது.
நாளைக்கே கடிதம் எழுதிவிட வேண்டும். கமலத்தைச் சமாளிக்க, ஆபீஸில் கடனை வாங்கியாவது வி.சி.ஆர். வாங்கித் தந்துவிடலாம்.
தீர்மானம் எடுத்த பிறகு, உட்கார்ந்தான். பத்து நாள்களாய் அலைக்கழிக்கும் உறுத்தல் சட்டென்று குறைந்துவிட்டதை உணர முடிய, சின்னதாய் தனக்குத் தானே புன்னகைத்துக்கொண்டான்.
இப்போது நிம்மதியாய் படுக்க முடியும் என்கிற நம்பிக்கையுடன் எழுந்து இரண்டடி வைத்த நொடியில், வாசல் மணி அடித்தது.
படம் முடிந்துவிட்டதா? அதற்குள்ளாகவா? மணி எட்டரைதானே ஆகிறது!
புருவங்கள் கேள்வியில் உயர, கதவைத் திறந்தான்.
தந்தி சேவகர்.
கையெழுத்து போட்டு வாங்குவதற்குள், உள்ளங்கையில் வியர்த்தது.
பிரித்தான்.
‘அம்மா மாரடைப்பால் இன்று பகல் காலமானார். உடனே வரவும் – கஸ்தூரி’
டைப் செய்யப்பட்டிருந்த வாசகங்களின் அர்த்தம் புரியாத மாதிரி, பத்து தரம் திரும்பத்திரும்ப படித்தான்.
கிழவி செத்துவிட்டாளா?
ஐயோ… கிழ… வார்த்தை பாதியிலேயே நின்றது. கமலத்தைப் போலவே தானும் ‘கிழவி’ என்றே குறிப்பிடுவதை முதல் முறையாக உணர முடிய, இருதயம் அதிர்ந்தது. கூசியது. கால்கள் துவண்ட மாதிரி வெலவெலத்தது.
மெதுவாக நகர்ந்து நாற்காலியில் வந்து உட்கார்ந்தவன், முகம் கோணிப் போக, வாய்விட்டு “அம்மா… ஆ…” என்று கத்தலாக அழ ஆரம்பித்தான்.
– 1992.
சிவசங்கரி/இன்னொரு நாள் – விருட்சம் நாளிதழ்
சிவசங்கரி/பட்டாம்பூச்சியும் தூக்கமும் – விருட்சம் நாளிதழ்

சில மனைவிகள் இப்படி தான் என்னசெய்ய முடியும். யதார்த்தமான கதை