வளவ.துரையன்/இடமில்லை

14-11-25 அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை

ஒருவர் பின் ஒருவர் சட்டையைப்
பிடித்துக் கொண்டு தொடர் வண்டி ஓட்டம்

மாலதி வீட்டுவாசலில் அவளை இறக்கிவிடும்
வரும்போது அவளை ஏற்றிக்கொள்ளும்

பயணச் சீட்டுகளில்லாமல் இலவசப் பயணம்

வருபவரைப் பொருத்தே பெட்டிகள் நீளும்

முதலில் இருப்பவர் குக்கூகுக்கூ கத்தியவுடன்
பெட்டிகள் தயாராகிப் பிடித்துக் கொள்ளும்

கடைசியில் இருப்பவர் கையே பச்சைக்கொடி

அம்மாவோ அப்பாவோ அடிக்க வரும்போது
பெட்டிகள் விபத்துக்குள்ளாகும்
பிரிந்து ஓடிவிடும்

சட்டை போடவே வழியில்லாத
சண்முகத்திற்கு மட்டும் அங்கே இடமில்லை