
காணவில்லை என்ற சுவரொட்டியைப் பார்த்து அதிர்ந்தான் கேசவன்.
காணாமல் போனவர்களைப் பற்றியெல்லாம் கண்டு கொள்பவன் இல்லை அவன். இருக்கிறோம் என்பதற்கே இத்தனை உழைப்பைக் கொட்ட வேண்டி இருக்கக் காணாமல் போனவர்களைப் பற்றிக் கவலைப் பட நேரமில்லை என்பது அவன் எண்ணம்.
இந்தச் சுவரொட்டி மிகச் சரியாக அவன் வீட்டின் முன் ஒட்டப்பட்டிருக்க வேலையிலிருந்து திரும்பிய அசதியில் முதலில் கவனிக்காது வந்தவன் பின் ஏதோ பார்த்தோமேயெனப் பின்னால் நடந்து அந்தச் சுவரொட்டியைப் பார்த்தான். அதிர்ந்தான்.
அது அவனைப் போலவே இருந்தது.
“காணவில்லை. கடந்த ஒரு மாதமாய் வேலை வேலையென அலையும் இவரை வீட்டினர் பார்க்க முடிய வில்லையெனக் கவலை கொள்கிறார்கள். கண்டு பிடித்துத் தருபவருக்கு ஒரு வேளை சாப்பாடு இலவசம். இப்படிக்கு மனைவி மஞ்சுளா.”
“வந்தாச்சா? காணோமேன்னு ஒரு போஸ்டர் மட்டும் அடிச்சேன்!” படித்தவனின் முன் வந்து சுவரொட்டியைக் கிழித்தாள் மஞ்சுளா.

One Comment on “மாலா மாதவன்/அதிர்ச்சி வைத்தியம்”