12.03.2022 – வெள்ளிக்கிழமை
ஆசிரியர் பக்கம்
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: சாப்பிட்டவுடன் உங்களுக்குத் தூக்கம் வருமே? எப்படிச் சமாளித்தீர்கள்
அழகியசிங்கர் : புத்தகக் காட்சியில்தானே கேட்கிறீர்கள். நன்றாகத் தூங்க முடியாமல் அவதிப்பட்டேன். பேசிக்கொண்டிருக்கும்போதே தூங்கி விடுவேன். நண்பர்கள் பார்த்துக்கொண்டதால் தப்பித்தேன்.
ஜெகன் : என்னன்ன புத்தகங்கள் என்று கேட்கப் போவதில்லை. எப்போது படிக்கப் போகிறீர்கள் என்று கேட்கப் போவதில்லை.
மோகினி : சொல்ல மாட்டார். கேட்காதீர்.
அழகியசிங்கர் : உண்மைதான். ஆனால் ஒரு முயற்சி செய்யலாமென்று நினைக்கிறேன்.
மோகினி : என்ன முயற்சி?
அழகியசிங்கர் : டிரீம் லைப்பரரி ஒன்று ஆரம்பிப்பது.
ஜெகன் : புரியவில்லை.
அழகியசிங்கர்: வாரத்திற்கு ஒரு நாள் கூடி காலை 10 மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை படித்துக் கொண்டிருப்பது.
ஜெகன் யார் வருவார்கள்?
அழகியசிங்கர் : வரக்கூடிய நண்பர்களைக் கூப்பிடுவேன்.
மோகினி : உங்கள் புத்தகங்களை எல்லாம் வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள். தர மாட்டார்கள்.
ஜெகன் : முதலில் படிக்க வருவதுபோல் வருவார்கள். படித்துவிட்டுக் கொடுக்கிறேன். இதைக் கொடுங்கள் என்று கேட்பார்கள்.
மோகினி : நீங்களும் தயக்கத்துடன் கொடுப்பீர்கள்.
அழகியசிங்கர் : அது மட்டும் கொடுக்க மாட்டேன். புத்தகம் படிக்கிறேன் கொடுங்கள் என்று கேட்டாலே கேட்பவர் என் விரோதியாகி விடுவார். அவரை அழைக்கவும் மாட்டேன். பேசவும் மாட்டேன்.
ஜெகன் : இந்த முயற்சி சாத்தியமா?
அழகியசிங்கர் : சாத்தியம் ஆனால் நிஜ லைப்பரரி. இல்லாவிட்டால் டிரீம் லைப்பரரி.
மோகினி : என்னதான் அப்படி இந்தப் புத்தகக் காட்சியில் புத்தகங்கள் வாங்கினீர்கள்.
அழகியசிங்கர் : சொல்ல மாட்டேன். உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.லிஸ்ட் போட்டு அறிவிக்க விரும்பவில்லை.
மோகினி : இன்றைய இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.
அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.
ஜெகன்: இன்று பேசியது போதும்.
அழகியசிங்கர். இரவு வணக்கம்.