1969-ல், எனது 17-வது வயதில், ஜி.நாகராஜனிடம்/சி.மோகன்

1969-ல், எனது 17-வது வயதில், ஜி.நாகராஜனிடம் மாணவனாகப் படித்தேன். புகுமுக வகுப்பில் (பியூசி) மூன்றாம் பாடத்தில் தவறி, மதுரையில் பிரசித்திபெற்ற எஸ்டிசி என்ற தனிப்பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்தபோது கணிதப் பாடமெடுத்த ஆசிரியர் ஜி.நாகராஜன். அப்போது, எனக்கு வாசிப்புப் பழக்கமிருந்தாலும் நவீனத் தமிழ் இலக்கியத்தோடு பரிச்சயமில்லை. அவர் ஒரு முக்கியமான எழுத்தாளர் என்பதும் தெரியாது. ஆனாலும், சில நாட்களிலேயே அவர் ஒரு லட்சிய மனிதனாக என் மனதில் இடம் பிடித்திருந்தார். அபாரமாக வகுப்பெடுப்பார். அற்புதமாகப் புரிய வைப்பார். கணிதத்தில் சறுக்கித்தான் பியூசியில் தோற்றிருந்தேன். அதே கணிதத்தில் மிகச் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று பிஎஸ்ஸியில் கணித மாணவனாகச் சேர அவருடைய ஆசிரியத்துவம்தான் காரணம். அப்போது அவருக்கு வயது 40. கம்பீரமும் பொலிவும் கூடி முயங்கிய வசீகரத் தோற்றம். உடல் பயிற்சிகளினால் திண்மம் பெற்ற உடல்வாகு. ஸ்டாலின் மீசை. ராணுவ பாணி முடிவெட்டு. தன்னம்பிக்கை மிளிரும் முகம். ஒவ்வொரு அசைவிலும் அணுகுமுறையிலும் பாந்தமாக வெளிப்படும் லயம். அவரைப் போல் ஆக வேண்டுமென்று ஒரு கனவு மனிதனாக மனம் அவரை வரித்திருந்தது. நாலு முழ அகலக்கரை வேட்டி, வெள்ளை ஜிப்பா, சவரம் செய்த முகமென எப்போதும் பளிச்சென்று இருப்பார்.

அவருடைய ஆடை எப்போதும் புதுசு போலவே தோற்றமளிக்கும். வலது கை நடுவிரலும் சுட்டுவிரலும் சிறு கத்திரிபோல் அமைந்திருக்க, அவற்றின் இடுக்கில் வேட்டியின் பின்புற நடுமுனையை உயர்த்திப் பிடித்தபடி மிடுக்காக அவர் நடக்கும் லாவகத்தை அதிசயித்துப் பார்த்தபடி இருந்திருக்கிறேன். இடதுகை நடுவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையே சதா கனலும் சார்மினார் சிகரெட். பின்னாளில், நான் வேட்டி கட்டத் தொடங்கியபோது அவருடைய பாணியில் நடந்து பெருமிதம் கொண்டிருக்கிறேன்.

அதன் பிறகு, ஆறு ஆண்டுகள் கழித்து, 1975-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில், தற்செயலாக ஒரு அச்சகத்தில் அவரைப் பார்க்க நேர்ந்தது. என்னைப் பார்த்த உடனே, “நீ என்னோட ஸ்டூடண்ட்தானே” என்றார். நான்தான் அவருடைய தோற்றத்தில் சற்று தடுமாறிவிட்டிருந்தேன். என் லட்சிய ஆண்மகன் பிம்பம் நலிவுற்று, தோற்றம் குலைந்து வாடி வதங்கியிருந்தது. இச்சமயத்தில் அவர் முக்கியமான எழுத்தாளர் என்பதை அறிந்திருந்தேன். நானும் எழுத்துலகில் முதல் எட்டு எடுத்துவைத்திருந்தேன். அன்று கண்ட அவருடைய தோற்றம் வேதனையானது. பளுப்பேறிய வேட்டி, ஜிப்பா. உடல் வெகுவாகத் தளர்ந்துவிட்டிருந்ததில் ஜிப்பா தொளதொள என்றிருந்தது. தயக்கம் சூடியிருந்தது முகம். உடல்மொழியில் மிடுக்கு வெளியேறியிருந்தது. அசைவிலும் அணுகுமுறையிலும் நிச்சயமற்ற தன்மை படர்ந்திருந்தது. கடைசி காலத்திலோ நிலைமை இன்னும் மோசம். லேசாகக் கூன் விழுந்து விட்டிருந்தது. கடுமையான இருமலும் சளியும் இம்சித்துக் கொண்டிருந்தன. சொறி சிரங்கு என தோல் வியாதியின் அவஸ்தை. ஆனால், அவருடைய அபார நினைவாற்றலும் புத்தியின் தீட்சண்யமும் கடைசி நாள்வரை பிரமிப்பூட்டுவதாகத்தான் இருந்தது.

நன்றி: இந்து தமிழ் திசை

முகநூலில் தகவல் அளித்தவர் : ஆர்.கந்தசாமி