திரைப்படப் பாடல்களுக்கு ஜலதரங்கம்/குன்னக்குடி வைத்தியநாதன்

திரைப்படப் பாடல்களுக்கு ஜலதரங்கம் வாசித்துக் கொண்டிருந்த வெங்கட்ரமணராவ் என்பவர் ஒரு முறை வைத்தியநாதனை சந்தித்தார். எவ்வளவுதான் கச்சேரிகளில் வாசித்தாலும் பெரிதாக பணம் சேர்க்க முடியாது என்று வைத்தியநாதனுக்கு சொன்ன அவர் பணம் சம்பாதிக்க ஒரே வழி சினிமாதான் என்று சொன்னது மட்டுமின்றி சேலத்தில் உள்ள மாடர்ன் தியேட்டர்சில் போய் சேரும்படி வைத்தியநாதனுக்கு யோசனையும் கூறினார். அடுத்த கணமே சேலத்திற்குப் புறப்பட்டுவிட்டார் வைத்தியநாதன்.

வைத்தியநாதனின் திறமை என்ன என்பதை சோதித்துப் பார்த்த பிறகே அவரை சேர்த்துக் கொள்ள முடியும் என்று சொன்ன மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகிகள் அவரது திறமையை சோதித்துப் பார்ப்பதற்காக இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் முன்னாலே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினர்.

“எங்கே வாசி பார்க்கலாம்” என்றார் ஜி.ராமனாதன். இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் அவர்களுக்கு மிகவும் பிடித்த ராகம் சாருகேசி ராகம். அந்த விஷயம் வைத்தியநாதனுக்குத் தெரியாது என்ற போதிலும் அதிர்ஷ்டமும், நேரமும் அவருக்குத் துணை நின்ற காரணத்தாலோ என்னவோ சாருகேசி ராகத்தில் அமைந்த ஒரு பாடலைப் பாடிக் காட்டினார் அவர்.

அதைத் தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் கதவுகள் அவருக்குத் திறக்கப்பட்டன. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பு பொருளாதார ரீதியாக மட்டுமின்றி ஒரு இசையமைப்பாளராக தனது தகுதியை ன் வளர்த்துக் கொள்ளவும் குன்னக்குடி வைத்தியனாதனுக்கு மிகப் பெரிய அளவில் உதவியது.

அந்த அனுபவங்களின் துணையுடன் தனது 17-வது வயதில் சென்னையில் காலடி எடுத்து வைத்த வைத்தியநாதனுக்கு அப்போது பிரபலமாக இருந்த சூலமங்கலம் சகோதரிகளின் அறிமுகம் கிடைத்தது. அவர்களது கச்சேரிகளுக்கு வாசிக்கத் தொடங்கிய வைத்தியநாதனுக்கு தமிழகத்தின் மிகப் பெரிய இசைக் கலைஞர்களாக விளங்கிய செம்மங்குடி, மகாராஜபுரம் சந்தானம், சீர்காழி கோவிந்தராஜன், டிஎன்.ராஜரத்தினம் பிள்ளை, திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை உட்பட பல கலைஞர்களோடு இணைந்து கச்சேரி செய்யக் கூடிய வாய்ப்புகள் கிடைத்தன.

1970-ம் ஆண்டு தனியாக வயலின் கச்சேரி செய்யத் தொடங்கியதுதான் குன்னக்குடி வைத்தியநாதனின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

‘சரஸ்வதி ஸ்டோர்ஸ்’ என்ற பெயரில் இசைத் தட்டுக்களை வெளியிடும் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்த ஏவி.மெய்யப்ப செட்டியார் ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜை தினத்தன்று அவரது அலுவலகத்தில் மிகவும் பிரம்மாண்டமாக பூஜையை நடத்துவது வழக்கம்.

அந்த பூஜையில் பிரபலமான பல பாடகர்கள் பாடுவார்கள். அப்படி பாடிக் கொண்டிருந்த சிதம்பரம் ஜெயராமனுக்கு வயலின் வாசித்துக் கொண்டிருந்த குன்னக்குடி வைத்தியநாதன் அடுத்த பாடலைப பாட சி.எஸ்.ஜெயராமன் இடைவெளி எடுத்துக் கொண்ட சமயத்தில் ‘திருநீலகண்டர்’ படத்திலே தியாகராஜ பாகவதர் பாடிய ‘தீன கருணாகரனே’என்ற பாடலை வயலினில் வாசித்தார்.

அவர் வாசிக்க ஆரம்பித்தவுடன் அவர் பக்கம் திரும்பிய மெய்யப்ப செட்டியார் அவர் வாசித்து முடிக்கின்றவரையில் அடுத்த பக்கம் திரும்பவில்லை.

கச்சேரி முடிந்ததும் குன்னக்குடி வைத்தியநாதனைத் தனியாக அழைத்த அவர் ‘உனக்கு பாகவதர் பாட்டு எல்லவற்றையும் வாசிக்கத் தெரியுமா,,?” என்று கேட்டார். “தெரியும்” என்று வைத்தியநாதன் தலையை ஆட்டியவுடன் சரஸ்வதி ஸ்டோர்ஸ் நிர்வாகியான கண்ணனை அழைத்த செட்டியார் வைத்தியநாதனின் வயலின் வாசிப்பை இசைத் தட்டாக கொண்டு வர ஏற்பாடு செய்யும்படி அவரிடம் கூறினார்.

வைத்தியநாதன் வயலினில் வாசித்த திரைப்படப் பாடல்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து எச்.எம்.வி. நிறுவனத்துக்காக பக்திப் பாடல்களுக்கு இசையமைக்கக் கூடிய வாய்ப்பு குன்னக்குடி வைத்தியநாதனுக்குக் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து பல இசைத்தட்டு நிறுவனங்களுக்காக எண்ணற்ற பாடல்களைத் தனது இசையமைப்பில் உருவாக்கினார் வைத்தியநாதன்.

நன்றி: டூரிங் டாக்கீஸ்

முகநூல் பதிவு : ஆர.கந்தசாமி