
டெல்லிப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாருடைய திருவுருவப் படம் அணி செய்யும் விழா. அந்த பெரிய அறையை ஏற்கனவே தாகூர், பிரேம்சந்த் முன்ஷி,, சுமித்திரானந்த் பந்த் போன்றவர்களுடைய படங்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தன. ஆறு மாத விவாதங்களுக்குப் பிறகு, பாரதி படம் இடம்பெற அனுமதித் தந்தார்கள்
துணை வேந்தர் சீனவியல் (Chinese Studies) அறிஞர். இந்தி மொழி வல்லுநர். பாரதியைப் பற்றி நான்கு பக்கத்துக்கு ஓர் குறிப்பு ஆங்கிலத்தில் எழுதித் தரும்படித் தமிழ்த் துறையைக் கேட்டிருந்தார்.
நான் எழுதிக் கொண்டு போய் அவரிடம் கொடுத்தேன்.
அன்று மாலை மூன்று மணிக்குக் கூட்டம்.
கூட்டம் தொடங்குவதற்கு அரை மணிக்கு முன்பு என்னை அவர் கூப்பிட்டு அனுப்பினார். போனேன்.
“உங்கள் கவிஞர் தமிழில் எழுதினாரா தெலுங்கிலா?” என்று கேட்டார்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது நான் எழுதிக் கொடுத்ததைச் சுத்தமாக அவர் படிக்கவேயில்லையா என்று கேட்கத் தோன்றிற்று. மொழி அறிஞர், இவர் பாரதியாரைப் பற்றிக் கேள்விப்பட்டதே கிடையாதா என்ற கோபமும் வந்தது.
இதற்குள் அவருடைய தனிச் செயலர், “சாரி சார், நாளைக்கு இசைக் கல்லூரியில் பேச வேண்டிய கூட்டத்தின் ஃபைலைத் தவறாகக் கொடுத்துவிட்டேன்” என்று சொல்லிக்கொண்டே, அவர் கையில் வைத்திருந்த ஃபைலை வாங்கித் தம் கையிலிருந்ததைக் கொடுத்தார்.
அவர் தமிழர். “நாளைக்கு ம்யூஸிக் டிபார்ட்மெண்ட்லே தியாகராஜர் படம் திறந்து வைக்கப் போறார் சார்” என்று அவர் அசட்டுச் சிரிப்புடன் என்னிடம் சொன்னார்.
ஆகவே, வட இந்தியர், மொழி அறிஞர், துணை வேந்தர் – அவருக்குக் கர்நாடக இசைப் பிதாமகர்களில் ஒருவராகிய தியாகராஜரைப் பற்றியும், இந்தியாவின் முதல் தேசீயக் கவிஞர் என்று சொல்வதற்கு முழுவதும் தகுதி வாய்ந்த மகாகவி பாரதியைப் பற்றியும் எதுவும் தெரியாது என்பது உறுதியாயிற்று.
இன்னொரு செய்தி. போன நூற்றாண்டு ஐம்பதுகளில், தில்லித் தமிழ்ச் சங்கம், கப்பலோட்டிய தமிழரின் நாளைக் கொண்டாடுவது என்று தீர்மானித்து, ஒரு பிரபல ஆங்கிலப் பேராசிரியராக இருந்த வட இந்திய பாராளுமன்ற அங்கத்தினரை அழைத்திருந்தார்கள். அவர் பெயரை டாக்டர் சுப்பராயன் பரிந்துரை செய்திருந்தார். அந்த எம்.பியை அழைக்கப் போனவர், அவரிடம், “தமிழ்ச் சங்கம் வி.ஓ.ஸி. டே கொண்டாட இருக்கிறது. நீங்கள் அவசியம் வர வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். வ.உ. சிதம்பரம் பிள்ளைப் பெயரை, அவர் ஏன் ஆங்கில ‘இனிஷியல்’களுடன் சொன்னார் என்பது இறைவனுக்குத்தான் வெளிச்சம். அவர் வர ஒப்புக்கொண்டார்.
முகநூலில் தகவல் : ஆர்.கந்தசாமி
