அழகியசிங்கர்/சுழன்று

   (20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த கவிதைகள்)


    மாடிப்படிக்கட்டுகளில் நின்று
    தென்னங் கீற்றின் ஊடே
    தெரியும் காட்சிகளைக் கண்டு
    பரவசம் கொள்ளும் தருணம்
    இதை ஏதுமறியாமல்
    சுழன்று சுழன்று பறக்கும்
    புறாக் கூட்டம்
    யாரையும் இம்சிக்கவில்லை
    ஆனால் அவைகளின்
    கவனத்தைக் கவர
    என்ன செய்ய இயலும்?

    இரவின் சப்த ஜீவன்கள்
    அடங்கி நின்று
    வாழ்க்கை ஒயிலாய்த்
    தொற்றிக்கொண்ட நிலை
    நிலா வெளிச்சத்தில்
    என்னெதிரில் விரியும்
    மேகச் சுருள்களில்
    கவனம் சிதைந்து போன
    மாயம் என்னவோ?

    காற்றடிக்கும் நேரம்
    எதுவாக இருக்குமென்று தெரியவில்லை
    புவியில் என்மேல் படர்ந்த
    காற்றின் அசைவில்
    நான் மறந்துபோனேன்
    காற்றுதானா அதுவென்று புரியாமல்

    சுழன்று சுழன்று வரும்
    பிரச்சினைகளில் மீளமுடியா நேரத்தில்
    காற்றெங்கே என்னைத் தழுவ.

அழகியசிங்கர்/ தட்டச்சுப்பொறி – விருட்சம் நாளிதழ்

One Comment on “அழகியசிங்கர்/சுழன்று”

Comments are closed.