
19-9-25 விருட்சம் அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 9
மொட்டை மாடியில்
அம்மா கட்டிய கொடியில்
அவளின் அரசாங்கம்தான்.
நான்கு கடைகள் ஏறி
இறங்கிக் கயிறு வாங்கிக் கட்டினாள்.
குருவியும் காக்கையும் கூட
அம்மா இல்லாதபோதும்
பயந்துகொண்டே உட்காரும்.
துணியில் சுருக்கங்கள் நீக்கி
அம்மா உலர்த்துவது
பார்க்க அழகாக இருக்கும்.
அப்படியே மடித்தெடுத்துக்
கீழே வருவாள்.
கேட்காமல் துணி காயப்போடும்
குடித்தனக்காரர்கள் மீது
கோபப் பாய்ச்சல்தான்.
மாலையில் துணிகளை
எடுக்குமுன்
கொடியில் அவை பறப்பதை
ஏதோ நாட்டுக்கொடி
பறப்பதுபோலப்
பார்த்து ரசிப்பாள்.
அவள் இப்போது
அடுக்குக் குடியிருப்பில்
மின்விசிறி சுழலவிட்டு மேல்கூரையின் கீழ்
உலர்த்துகையில் மௌனமாக அழுகிறாளோ

One Comment on “வளவ.துரையன்/அம்மாவின் கொடி”
Comments are closed.