சசிகலா விஸ்வநாதன்/அலுவலக அவசரம்

கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர்

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை

காலை வேளை அவசரம்..
காலனும் கைகட்டி
காத்து தான் இருக்கணும்.
பிள்ளைகளை பள்ளிக்குத் தள்ளிவிட்டு,
அவரின் கோப பார்வையை தவிர்த்து,
அத்தையின் வசவுகளை விழுங்கி,
காலை உணவை மறந்து,
ஆசையாய் எடுத்து வைத்த
பருத்திப் புடவையை ஒதுக்கி,
நெளு நெளு பூனம் சேலையை உடுத்தி,
கைப்பையை தேடி
பேருந்துக்கு சில்லறை எடுத்து வைக்கும் நேரத்தில்,
இடது கையால்
நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை அழுத்தி
ஓட்டமும் நடையுமாக ஓடி
பேருந்து நிறுத்தத்தில் நின்றதும்,
பேருந்து இன்னும் போகவில்லை; என்ற நற்செய்தி கேட்டதும்,
நினைவில் வந்தது;
மறந்து வைத்துவிட்டு வந்த
மதிய உணவு டப்பா!
கண்ணில் பொங்கும் நீரை மறைக்க;
கை தேடுதே ,
கருப்பு கண்ணாடியை.
எதிரே வந்த
அடுத்த வீட்டுக்காரியின்
நமட்டு பார்வையிலிருந்தும்,
உதட்டு சுழிப்பிலுமிருந்தும்,
காப்பாற்றும் தெய்வமாக,
வந்து நின்றது;
என் பேருந்து 73/A

சசிகலா விஸ்வநாதன்/இறை 1 – விருட்சம் நாளிதழ்

One Comment on “சசிகலா விஸ்வநாதன்/அலுவலக அவசரம்”

Comments are closed.