எஸ்ஸார்சி/வேறுவழி

இணையக் கவியரங்கம்
17/10/25
எஸ்ஸார்சி வாசித்த கவிதை. 4

வயிறுதான் பசித்து
மண் தொலைக்க வைக்கிறது
திரைகடல் ஓடியும் திரவியம் தேடலாம்
வாழ்ந்த மண்ணைத் தொலைத்து
வேறிடம் மீதவாழ்க்கை
பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாய் சிறுத்து
விடைபெறுகிறது
எங்கோ வந்து என்னவோ வாழ்க்கை
வங்கிக்கணக்கில் எஜமானர்கள் காசு போடுகிறார்கள்
பிடிக்காதவைகள் வாங்கி
வயிறு ரொப்பிக்கொள்ளத்தான்.
பேசிய தாய்மொழி இற்றுக்கொண்டு விட்டது
வளரும் தலைமுறைகள்
தாய்மொழியைத் தொலைத்துவிட்டு
அம்மணமாய் நிற்கிறார்கள் அறியாமல்
திருக்குறளும் திருவாசகமும் திருமூலமும்
எங்கே விளங்கப் போகிறது
மண்மாறி மடைமாறிப்போன சொந்த
சொச்சங்களுக்கு.
எதை இழந்தோம் எத்தனை
இழப்பு அறியாமலே அப்பாவிகள்
நூறு மாடிக் கட்டிடத்தில் ஏறி இறங்கி
ஓடுகிறார்கள் யாரோ மூட்டைக் கட்ட
வாழ்வைத் தொலைத்தவர்கள்
மிடுக்காய் பவனி வந்து
யாரைப் பார்த்தோ
ஏளனமாய்ச்
சிரிக்கிறார்கள்.

எஸ்ஸார்சி/சரவணபெலகெலா – விருட்சம் நாளிதழ்

One Comment on “எஸ்ஸார்சி/வேறுவழி”

Comments are closed.