ஸ்ரீ பாரதியார் சரித்திரம்/செல்லம்மாள் பாரதி

  1. பாரதி தந்தையின் வரலாறு

திருநெல்வேலி ஜில்லா சிவலப்பேரி என்ற கிராமத்தில் ‘கடுவாய் சுப்பையர் என்ற பிராம்மணோத்தமர் சுக ஜீவனம் செய்து வந்தார். ஏராளமான விளைநிலங்கள் அவருக்கு உண்டு. வெகுநாட்கள் குழந்தைகள் இல்லாமல், அனேக தான தருமங்கள், ஸ்தல யாத்திரைகள் முதலியவற்றிற்காகச் சொத்தில் பாதிவரை செலவு செய்தபின், குப்பம்மாள் என்ற பெண்ணும், சின்னச்சாமி என்ற சுந்திரராஜனும் பிறந்தார்கள். அருந்தவம் செய்து பிறந்த குழந்தைகள் இருவரையும் இரு கண்கள் என மதித்து மிக்க அருமையாக வளர்த்து வந்தார்.

சுப்பையர் மனைவி பாகீரதி அம்மாள் பொறுமையில் பூமாதேவியை நிகர்த்தவர். தமது கணவர் – தம் மேல் கவனமின்றி மற்றொரு விலைமாதுடன் நேசம் வைத்திருப்பது தெரிந்துங்கூடக் கணவரை எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லவோ, கணவரை அவமதிக்கவோ மாட்டாள். விலைமாதுங்கூட பாகீரதி அம்மையைச் சொந்த சகோதரியென மதித்து, அன்புடன் இருந்து வந்தாள் எனில் அம்மையின் நற்குணத்தை வர்ணிப்பது அனாவசியம். குழந்தைகள் என்ன தப்பு செய்தாலும் மிக்க பொறுமையோடு இருப்பார்.

சுப்பையர் தம் பெண் குப்பம்மாளை – வாகைக்குளத்தில், ஒரு நல்ல கண்யமான குடும்பத்தில் விவாஹம் செய்து கொடுத்தார். தமது மகன் சிறு வயதிலேயே, தர்க்க
சாஸ்திரத்தில் வல்லவனாகவும், பெரிய பண்டிதனாகவும் இருப்பது கண்டு மகிழ்ந்தார். அவன் பெரிய மனிதனாகி உபயோகம் செய்வதைப் பாராமலேயேகாலஞ் சென்று விட்டார்.

சின்னசாமியோ தனது ஊராகிய சிவலப்பேரிய கல்வி கற்பதற்காகவும், அக்காலத்தில் மிகக் கியாகி அடைந்திருந்த எட்டயபுரம் ஜமீனில் ஒரு உத்யோகம் வேண்டும் என்னும் ஆசையோடும் தாயாருடன் எட்டயபுரம் வந்து வசிக்கலானார். அங்கு அப்போது சமஸ்தான வித்வான்களை ஆதரித்து, அவரவரது புலமைக்குத் சன்மானமளித்துத் தமிழ்க் கலையை வளர்த்து வந்தார். மதுரையைப் போல எட்டயபுரத்தையும் ஆக்க அவர் அவல் கொண்டிருந்தார். அதனால் எட்டயபுரத்து ராஜ சபையில் சர்ச்சைகளும் தமிழாராய்ச்சிகளும் அதிகமாக நடைபெற்றன. மகாராஜா ஆதிகாலத்துச் சோழ பாண்டியன் முதலிய அரசர்களை யொத்த கல்வி அறிவுள்ளவர். அதனால் இயற்கை அறிஞரான சின்னசாமி, விரைவில் தமிழிலும், ஆங்கிலத்திலும், தர்க்கத்திலும் தன்னிகரற்றுக் கணிதத்தில் அபாரமான புலமையைப் பெற்று அங்கு வசித்த புலவர்களின் மத்தியில் ஒரு ஆதித்தனெனத் திகழ்ந்தார்.

அவரது கூரிய புத்தியையும், தமிழ்ப் புலமையையும் கண்ட மகாராஜா, சின்னசாமி அய்யருக்குத் தமது ராஜ சபையில் முதல் ஸ்தானம் அளித்துக் கௌரவித்த சின்னசாமி அய்யர் தமது தாய்மாமன் மகளான லக்ஷ்மியை மணம் புரிந்து இல்லறம் நடத்தலானார். சின்னச் அய்யருக்கு இவ்வளவு நற்குணங்கள் அமைந்தும், முன்கோபம் மட்டும் அசாத்யம். உறவினரோ, மனைவியோ – எதிர் நின்று பேசவும் நடுநடுங்குவார்கள்.
. சூரபத்மன் அரசு புரிந்ததுபோ – ஊரார் யாவரும் அவரை மதித்துத் தலைவணங்கும்படி தமது செல்வாக்கினால் நடந்துவந்தார்.

(இன்னும் வரும்)